ஒத்திவைப்பு
நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இருந்தது. அந்த அணி இன்னும் 23 பந்துகள் ஆடி இருந்தால், ஒரு இன்னிங்க்ஸ் முடிவுக்கு வந்திருக்கும். எனினும், அதற்குள் மழை வந்து போட்டியை நிறுத்தியது.
ரசிகர்கள் அவதி
போட்டி எப்படியும் துவங்கும். டி20 போல ஓவர்கள் குறைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடக்கும் பார்க்கலாம் என ஆவலாக டிவி முன் அமர்ந்து இருந்த கிரிக்கெட் ரசிகர்கள் மழை விடாமல் பெய்ததை பார்த்து எரிச்சலில் இருந்தார்கள். அப்போது போட்டி நாளை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தனர் அம்பயர்கள். இதைக் கேட்டு செம கடுப்பில் இருக்கிறார்கள்.
ஆபீஸ் சிக்கல்
உலகக்கோப்பை அரையிறுதி வேலை நாளில் நடைபெறும் நிலையில், இன்று ஒரு நாள் தானே என்று பலரும் ஆபீஸுக்கு பொய் சொல்லி லீவு போட்டு, அந்த லீவுக்கும் மானேஜரிடம் வண்டி வண்டியாக திட்டு வாங்கி, கிரிக்கெட் பார்க்கத் தான் லீவு கேட்கிறோம் என்று தெரிந்த மானேஜரிடம் நம் கற்பனா சக்தியை எல்லாம் இறக்கி விட்டு, லீவு கேட்டு வந்தால், மழை வந்து எரிச்சல் கிளப்பியது.
மனைவியிடம் திட்டு
அடுத்து வீட்டில் இருக்கும் ஒரு டிவியில் 20 மெகா சீரியல்கள் ஓடும் நேரத்தை மனைவி மற்றும் அம்மாக்களிடம் கடன் வாங்கி, அதற்காக அவர்களிடம் அடி, திட்டு எல்லாம் வாங்கி டிவி முன் அமர்ந்தால், போட்டி நாளை மறுபடியும் தொடரும் என்று சொன்னால் கோபம் வராதா?
சீரியல்
ஏற்கனவே, உலகக்கோப்பை தொடரில் நான்கு லீக் போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது, அப்போதே கிரிக்கெட் ரசிகர்கள் வெறுப்படைந்தார்கள். தற்போது முக்கியமான அரையிறுதிப் போட்டியை சீரியல் போல இன்று பாதி, நாளை பாதி என நடத்துவதை கண்டு சோர்ந்து போயுள்ளனர். அவர்களால் நாளைக்கும் பொய் சொல்லி திட்டு, அடியெல்லாம் வாங்க முடியாது.
டி20 போட்டி வைங்க
போட்டிக்கு முடிவு தெரிகிறதே, மழையால் போட்டியை கைவிடுவதை விட நாளை நடத்தினால் நல்லது தானே என ஆயிரம் காரணம் சொன்னாலும், சாமானிய ரசிகர்கள் திருப்தி அடைய மாட்டார்கள். நாளைக்கு சாயங்காலம் எல்லோரும் ஆபீஸ் முடிச்சுட்டு வாங்க.. செமி பைனலை ஒரு டி20 போட்டியாக வைக்கிறோம் என்றால் மட்டுமே அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.