ஒற்றுமை
2008ஆம் ஆண்டு அண்டர் 19 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு விராட் கோலியும், நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சனும் கேப்டனாக இருந்தனர். மீண்டும் அதே கேப்டன்கள், 11 ஆண்டுகள் கழித்து ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் சந்திக்கின்றனர்.
பவுலிங் குறித்து கேள்வி
அண்டர் 19 அரையிறுதிப் போட்டியில் விராட் கோலி தன் பந்துவீச்சில் கேன் வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தினார். அது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. கோலி சமீப காலமாக பந்து வீசுவதில்லை. அவரது பந்துவீச ஓடி வருவதை பார்த்து இந்திய வீரர்களே சிரிப்பார்கள். இந்த நிலையில் இந்த கேள்விக்கு காமெடியாக பதில் சொன்னார்.
நான் ஆபத்தானவன்
"நான் பந்து வீசுவேன். எப்போது வேண்டுமானாலும் நான் பந்து வீசுவேன். நான் ஆபத்தானவனும் கூட, பிட்ச்சில் வழுக்கி விழாத வரை.." என்றார். கோலி சீரியசாக ஏதோ சொல்ல வருகிறார் என நினைத்த பத்திரிக்கையாளர்கள், அவர் பந்துவீச்சை அவரே கிண்டல் செய்ததை கண்டு குபீரென்று சிரித்தனர்.
பந்துவீச்சாளர்கள் சிக்கல்
கோலி காமெடி செய்தாலும், இந்திய அணியில் தற்போது பகுதி நேர பந்துவீச்சாளர்கள் இல்லை. சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று வருகிறது. இது குறித்து சச்சின் கூட எச்சரித்துள்ளார். இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் ஆல்-ரவுண்டர் ஜடேஜாவையும் அணியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இந்தியாவுக்கு சாதகம்
நியூசிலாந்து அணி கடைசி மூன்று உலகக்கோப்பை லீக் போட்டிகளில் தோல்வி அடைந்து இருப்பதால், கடும் அழுத்தத்தில் இருக்கிறது. அரையிறுதிப் போட்டியில் அந்த அணிக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். நியூசிலாந்து அணியின் நிலை இந்திய அணிக்கு சாதகமாகவே உள்ளது.