துவக்கம் சரியில்லை
நியூசிலாந்து அணியில் பல சொதப்பல்கள் இருந்தாலும், அதில் உச்சகட்டம் துவக்க வீரர்கள் தான். முதல் லீக் போட்டியில் துவக்க வீரர்கள் மார்டின் குப்டில், கோலின் மன்றோ அரைசதம் அடித்தனர். அதன் பின், இருவரின் பேட்டிங்கும் மிக மோசமாக இருந்தது. மன்றோவை நீக்கி விட்டு ஹென்றி நிக்கோல்ஸ் கடைசி இரு போட்டிகளில் களமிறக்கப்பட்டார். அவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து அணியை சோதித்து வருகிறார்.
எத்தனை ரன்கள் எடுத்தார்?
மற்றொரு துவக்க வீரர் மார்டின் குப்டில் என்றாவது சிறப்பாக ஆடுவார் என மனதை தேற்றிக் கொண்டு அவருக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருகிறார் கேப்டன் கேன் வில்லியம்சன். மார்டின் குப்டில் அனுபவம் வாய்ந்த அதிரடி வீரர். இரட்டை சதம் அடித்தவர் என பல சிறப்புகள் இருந்தாலும், உலகக்கோப்பை தொடரில் அணிக்கு இதுவரை கை கொடுக்கவில்லை.
சோகத்தில் நியூசிலாந்து
அவர் இதுவரை எட்டு போட்டிகளில் களமிறங்கி 166 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் இலங்கை அணிக்கு எதிராக எடுத்த 73 ரன்களை நீக்கி விட்டால், கடைசி ஏழு போட்டிகளில் 93 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஏற்கனவே, நியூசிலாந்து அணி கடைசி மூன்று லீக் போட்டிகளில் தோல்வி அடைந்து இருக்கும் நிலையில், அரையிறுதிக்கு முன் இவரது பார்ம் அவுட் காரணமாக சோகத்தில் உள்ளது.
அதிரடி ஆட்டம்
மார்டின் குப்டில் மட்டும் தன் இயல்பான அதிரடி ஆட்டம் ஆடி நியூசிலாந்து அணிக்கு சிறப்பான துவக்கம் அளித்தால், இந்திய அணியை எளிதாக வீழ்த்தி விடலாம் என கணக்கு போட்டு வருகிறது நியூசிலாந்து அணி நிர்வாகம்.
வெட்டோரி கருத்து
முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரி கூறும் போது, "முதல் பத்து ஓவர்களில் அடித்து ஆடினால், அனைத்து தோல்விகளும் மறந்து போய் விடும்" என்று குப்டில் குறித்து கூறினார். குப்டில் அதிரடியாக ஆடத் துவங்கினால் சில ஓவர்களில் ரன் ரேட் வேகமாக எகிறும். ஆனால், அது நடக்குமா?
பகல் கனவு தான்
இந்திய அணியில் பும்ரா, ஷமி பவர்பிளேவில் பந்து வீசுவார்கள். அவர்கள் பந்துவீச்சில் இங்கிலாந்து அணியை தவிர எந்த அணியும் அதிரடியாக ரன் குவிக்கவில்லை. அதனால், மார்டின் குப்டில் அதிரடி காட்டுவார் என்பது நியூசிலாந்து அணிக்கு பகல் கனவாகவே இருக்கும்.