பிட்ச்சை மூடுவார்கள்
கிரிக்கெட் போட்டிகளின் இடையே மழை குறுக்கிடுவது புதிய விஷயம் அல்ல. பல ஆண்டுகளாகவே, மழை பெய்யும் போது பிட்ச் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை மூடி வைப்பதை அனைத்து நாடுகளும் வழக்கமாக வைத்துள்ளனர்.
மண்ணைக் கொட்டுவார்கள்
ஆனால், அவுட் பீல்டு பகுதிகளை மழையின் போது மூடி வைக்க மாட்டார்கள். அவுட் பீல்டில் தண்ணீர் தேங்கி இருந்தால் முன்பு அங்கே மட்டும் மண்ணைக் கொட்டி, ஒப்பேற்றி போட்டியை துவங்குவார்கள். ஆனால், தற்போது ஐசிசி விதியின் படி ஆடுகளம் முழுமையும் சரியாக இருந்தால் மட்டுமே போட்டி துவங்கும்.
அவுட் பீல்டும் முக்கியம்
இந்த நிலையில், பிட்ச் மட்டுமல்லாது அவுட் பீல்டும் முக்கியத்துவம் பெற்றது. அது மட்டுமின்றி, மழைக்கு பின் அவுட் பீல்டில் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற இயந்திரங்கள் வந்து விட்டாலும், அது அதிக நேரம் எடுக்கும் காரியம். இந்த நிலையில், தான் இலங்கை ஒரு புதுமையை பல வருடங்கள் முன்பு செய்தது.
இலங்கை என்ன செய்தது?
இலங்கையில் மிகச் சில கிரிக்கெட் மைதானங்களே உள்ளன. அங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மழை பெய்யும் போது, ஆடுகளம் முழுமையையும், அவுட் பீல்டு உட்பட, சேர்த்து தார்பாலின் மூலம் மூடும் வழக்கத்தை கொண்டு வந்தனர்.
வாயைப் பிளந்த நாடுகள்
மற்ற நாடுகள், இது சாத்தியமே இல்லை என கூறி வந்த போது, அதிக ஊழியர்கள் உதவியுடன், சற்றும் பிசகாமல், ஒரீரு நிமிடங்களில் மொத்த மைதானத்தையும் அவர்கள் மூடியதை சில போட்டிகளில் கண்ட மற்ற நாட்டினர் வாயைப் பிளந்தனர்.
இனி கடினம் இல்லை
இலங்கை நாட்டை அடுத்து கிரிக்கெட்டை மதமாகவே பின்பற்றி வரும் இந்தியாவின் பல மைதானங்கள் அதே நடைமுறையை பின்பற்றத் துவங்கின. இதனால், மழை நின்ற உடன் போட்டிகளை துவக்க முடிந்தது. அவுட் பீல்டை சரி செய்ய வேண்டிய கடினமான பணி தேவையில்லாத ஒன்றாக மாறியது.
தவிப்பு
வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இருக்கும் இந்தியா, இலங்கை நாடுகளே மைதானம் முழுமையும் மூடுவதற்கு ஏற்பாடுகள் செய்து இருக்கும் நிலையில், வளர்ந்த நாடுகள் பட்டியலில் இருக்கும் இங்கிலாந்து நாட்டில் இன்னும், மைதானத்தின் மத்திய பகுதியை மட்டும் மூடி வைத்து விட்டு, அவுட் பீல்டை சீராக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.