நாட்டிங்ஹாம் : இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் விராட் கோலி பெரிய சாதனை ஒன்றை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இந்தியா தன் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணியை சந்திக்க உள்ளது. இந்தப் போட்டியில் விராட் கோலி 57 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் புதிய உலக சாதனை ஒன்றை செய்வார்.
மறுபுறம், நியூசிலாந்து அணி மிகவும் வலுவாக உள்ளது. தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிகளை பெற்றுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து போட்டியில் எந்த அணி வெல்லும் என்பதை கணிப்பது கடினமான ஒன்றாக உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முக்கியமான ஒருநாள் போட்டி சாதனை ஒன்றை செய்ய வாய்ப்பு உள்ளது.
விராட் கோலி இன்னும் 57 ரன்கள் எடுத்தால் ஒருநாள் போட்டிகளில் 11,000 ரன்கள் என்ற மைல்கல்லை கடப்பார். அதுவும் மிக விரைவாக 11,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் அடைவார்.
விராட் கோலி ஏற்கனவே, 10,000 ரன்களை விரைவாக கடந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை செய்துள்ளார். சச்சினின் அந்த சாதனையை முறியடித்து, விராட் கோலி அந்த சாதனையை செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அந்த சாதனையை செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விராட் கோலி இந்தப் போட்டியில் 57 ரன்கள் அடிக்க வேண்டும்.
உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்தியா ஆடிய இரண்டு போட்டிகளில் விராட் கோலி 18 மற்றும் 82 ரன்களை எடுத்துள்ளார். லீக் சுற்றுக்கு முன் நடந்த பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 18 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .
இதற்கிடையே, ஷிகர் தவான் காயமடைந்து இருப்பதால், இந்திய அணியில் துவக்க வீரராக ராகுல் களமிறங்குவார் என கூறப்படுகிறது. அவர் இறங்கி வந்த நான்காம் பேட்டிங் வரிசையில் யாரை இந்தியா விளையாட வைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.