இந்தூர்: இந்தியா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 50 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்திய மண்ணில், இந்தியாவுக்கு எதிராக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஐந்து முறை அரை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
முதல் ஒருநாள் போட்டியில் 84 ரன்கள் அடித்த டேரில் மிட்செல் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 131 ரன்கள் அடித்து இருந்தார். 2023 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாரல் மிட்செல் 552 ரன்கள் அடித்திருந்தார்.

குறிப்பாக லீக் சுற்றில், இந்தியாவுக்கு எதிராக 130 ரன்கள், மீண்டும் அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக 134 ரன்கள் அவர் அடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்று முறை 50 ரன்கள் மேல் சேர்த்திருக்கிறார்.இந்தியாவில் டேரில் மிட்செல் சிறப்பாக விளையாடுகிறார் என்ற காரணத்திற்காக ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் அவரை 14 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. 2024 சீசனில் மிட்செல் 13 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 318 ரன்கள் அடித்திருந்தார்.
இதில் இரண்டு அரை சதம் அடங்கும். இந்த சூழலில் யாருமே எதிர்பாராத வகையில் அடுத்த சீசனில் மிட்செலை எந்த அணியிலும் இடம் பெறவில்லை. அண்மையில் நடந்து முடிந்த மினி ஏலத்தில் கூட டாரல் மிட்செலை எந்த அணியும் வாங்கவில்லை.
34 வயதான வலது கை பேட்டர் மிட்செல், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளவர். ஹோல்கர் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில், நான்காவது வீரராகக் களமிறங்கி, குல்தீப் யாதவின் 21வது ஓவரில் பவுண்டரி அடித்து, 56 பந்துகளில் தனது ஐந்தாவது அரைசதத்தை நிறைவு செய்தார்.
இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து வீரர்களில் கேன் வில்லியம்சன் (2014) ஐந்து தொடர் அரைசதங்களை அடித்திருந்தார். கிளென் டர்னர், ஸ்டீபன் ஃப்ளெம்மிங், ரோஜர் ட்வோஸ், ராஸ் டெய்லர் தலா மூன்று முறை பதிவு செய்துள்ளனர்.ஆனால், இந்திய மண்ணில், இந்திய அணிக்கு எதிராகவே இந்த ஐந்து தொடர் அரைசதங்களையும் அடித்து டேரில் மிட்செல் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.