புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறி இருக்கிறார். இந்திய அணி தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
நியூசிலாந்து தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அந்த இரண்டிலும் இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கிறது. மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதிலும் தோல்வி அடைந்தால் இந்திய மண்ணில் "ஒயிட் வாஷ்" தோல்வியை பெற வேண்டிய மோசமான சூழ்நிலை இந்திய அணிக்கு ஏற்படும்.

அப்படி இருந்தும் இந்திய அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளரான பும்ராவை அணியிலிருந்து நீக்கி அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என முன்னாள் வீர தினேஷ் கார்த்திக் சுட்டிக் காட்டி இருக்கிறார். ஏனெனில், பும்ரா கடந்த வங்கதேச டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடினார். அதை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் அனைத்து போட்டிகளிலும் அவர் விளையாட வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் எனவும், இரண்டாவது போட்டியில் வெளியே அமர வைக்கப்பட்ட மற்றொரு வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜை அணியில் சேர்க்க வேண்டும் எனவும் தினேஷ் கார்த்திக் வலியுறுத்தி இருக்கிறார்.
இது பற்றி பேசுகையில், "பும்ராவுக்கு நிச்சயம் ஓய்வு அளிக்க வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அது நடந்தே ஆக வேண்டும். முகமது சிராஜை அணியில் சேர்க்க வேண்டும். வேறு யாருக்கும் காயம் ஏற்படாத பட்சத்தில் அணியில் வேறு எந்த மாற்றமும் செய்ய வேண்டிய தேவை இல்லை. மற்றபடி இரண்டாவது போட்டியில் ஆடிய அனைத்து பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களும் மூன்றாவது போட்டியிலும் ஆட வேண்டும்." என்றார் தினேஷ் கார்த்திக்.