இந்தியா - நியூசிலாந்து தொடர்
இந்தியா - நியூசிலாந்து ஒருநாள் தொடர் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 5 - 0 என வெற்றி பெற்றது. இந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது.
கேதார் ஜாதவ் இடம் பெற்றார்
இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியில் கேதார் ஜாதவ் இடம் பெற்றார். அவர் கடந்த சில போட்டிகளில் பெரிதாக ரன் குவிக்காத நிலையில், முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் களமிறங்கினார். கேப்டன் கோலி அவரை தேர்வு செய்ததை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
உலகக்கோப்பை சொதப்பல்
உலகக்கோப்பை தொடரில் கேதார் ஜாதவ் சொதப்பலாக ஆடினார். சில போட்டிகளில் கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டம் ஆடாமல் நிதான ஆட்டம் ஆடினார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நிதானமாக ஆடி அரைசதம் அடித்து, கடும் விமர்சனத்தை எதிர் கொண்டார்.
தொடர்ந்து வாய்ப்பு
எனினும், உலகக்கோப்பை தொடருக்கு பின் கேதார் ஜாதவ்வுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் 2020 டி20 உலகக்கோப்பைக்கு தயார் ஆகி வருவதால், இந்திய டி20 அணியில் கேதார் ஜாதவ்வுக்கு இடம் அளிக்கப்படவில்லை.
ஹர்திக் பண்டியா காயம்
ஒருநாள் அணியில் ஜாதவ் தொடர்ந்து இடம் பெற முக்கிய காரணம், ஹர்திக் பண்டியா காயத்தில் இருப்பது தான் என கூறப்படுகிறது. ஹர்திக் பண்டியா உலகக்கோப்பை தொடருக்கு பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்றார். அதன் பின் முதுகு வலி காரணமாக சிகிச்சை எடுத்தார்.
கூடுதல் பந்துவீச்சாளர்
ஹர்திக் பண்டியா அணிக்கு திரும்பாத நிலையில், அணியில் கூடுதல் பந்துவீச்சாளர் தேவை என்பதால் ஆல் - ரவுண்டரான கேதார் ஜாதவ் தொடர்ந்து அணியில் இடம் பெற்று வருகிறார். அதே நிலையில் தான் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் கேதார் ஜாதவ் பங்கேற்றார்.
ரசிகர்கள் விமர்சனம்
ஆனால், கேதார் ஜாதவ் களமிறங்கும் 11 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்பட்டதை பெரும்பாலான ரசிகர்கள் விரும்பவில்லை. அவர் நல்ல பேட்ஸ்மேன் இல்லை என்றும், அவர் எதிர்காலத்தில் உலகக்கோப்பை தொடரில் விளையாடப் போவதில்லை என்பதால் இப்போது அணியில் இடம் அளிக்கக் கூடாது என்றும் கூறி விமர்சித்து வருகின்றனர்.
மனிஷ் பாண்டே எங்கே?
மனிஷ் பாண்டே போன்ற சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கும் போது, கேதார் ஜாதவ்வுக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்பட்டது என கேட்டும் சில ரசிகர்கள் இணையத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
விளையாடும் முன்பே..
இதில் வேடிக்கை என்னவென்றால், போட்டி துவங்கிய உடன் ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை முன் வைக்கத் துவங்கி விட்டனர். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை யாரும் பொறுமையுடன் கவனிக்கவில்லை. அவர் முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடி ஆட்டம்
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட்களை இழந்த நிலையில், 46வது ஓவரில் களமிறங்கினார் கேதார் ஜாதவ். அவர் 15 பந்துகளில் 26 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு சிக்ஸ், மூன்று ஃபோர் அடித்து இருந்தார்.