மும்பை: இன்னும் சில தினங்களில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் மாற்று துவக்க வீரராக ஒருவர் கூட அறிவிக்கப்படவில்லை. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று துவக்க வீரராக இடம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதை சுட்டிக்காட்டி பிசிசிஐ வேண்டுமென்றே ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு தராமல் இருப்பதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். ஏற்கனவே, ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு டி20 அணியிலும், ஒரு நாள் அணியிலும் இடம் மறுக்கப்பட்டு வருகிறது. இத்தனைக்கும் டி20 போட்டிகளில் அவரது சராசரி 39 ஆக உள்ளது. 20 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் நான்கு அரை சதங்கள் அடித்து இருக்கிறார்.

ஒருநாள் போட்டிகளில் 6 இன்னிங்ஸ்களில் 115 ரன்கள் மட்டும் எடுத்துள்ளார். அவருக்கு மேலும் சில வாய்ப்பு வழங்கினால் அவர் ஒருநாள் போட்டியில் எப்படி செயல்படுவார்? என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆனால், அவருக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், டெஸ்ட் அணியிலாவது அவருக்கு மாற்று துவக்க வீரராக வாய்ப்பு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அந்த வாய்ப்பும் அவருக்கு இதுவரை கிடைக்கவில்லை. நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள அணியில் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் துவக்க வீரர்களாக உள்ளனர். மற்றொரு துவக்க வீரரான சுப்மன் கில் மூன்றாம் வரிசையில் களமிறங்க உள்ளார். இந்த நிலையில் துவக்க வீரர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டு விளையாட முடியாத நிலை வந்தால் மாற்று துவக்க வீரராக யார் அணியில் இடம் பெறுவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுப்மன் கில் துவக்க வீரராக இறங்கினால் மூன்றாம் வரிசையில் இறங்கபோவது யார்? என்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜுரல் ஆகிய இருவர் மட்டுமே மாற்று பேட்ஸ்மேன்களாக உள்ளனர். அவர்கள் இருவரும் நான்கு, ஐந்து அல்லது ஆறாவது வரிசையில் மட்டுமே பேட்டிங் செய்து வருகிறார்கள். அவர்களை டாப் ஆர்டரில் ஆட வைப்பது சரியாக இருக்குமா?
இந்திய அணியில் என்ன பாதிப்பு நடந்தாலும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மட்டும் இந்திய அணியில் இடமில்லை என பிசிசிஐ பிடிவாதமாக இருப்பதாக இந்த நிலையை சுட்டிக் கட்டி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.