புனே: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நியூசிலாந்து டெஸ்ட் தொடர் தோல்வி பற்றி பேசி உள்ள ஒரு விஷயம் சர்சையாக மாறி இருக்கிறது. 12 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி முதல்முறையாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்து இருக்கிறது.
இது பற்றி ரோஹித் சர்மா பேசுகையில், "இந்திய அணி ஒரு தொடரில் தோல்வி அடைய அனுமதி உள்ளது. இந்தியா அந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தியதால் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற முடியாது. இந்த எதிர்பார்ப்பை நாங்கள் ஒரு பழக்கமாக்கி விட்டோம். இது உங்கள் தவறு அல்ல. இந்திய அணி நல்ல கிரிக்கெட்டை ஆடி வருவதால் இந்த அணி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது." என்றார்.

இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றனர். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள ரசிகர் ஒருவர், "இந்திய மண்ணில் நடந்த கடைசி 11 டெஸ்ட் போட்டிகளில் நான்கு தோல்விகளை இந்தியா சந்தித்து இருக்கிறது. ஆனால், ரோஹித் சர்மா இதை நியாயப்படுத்துகிறார்." என சொல்லி இருக்கிறார்.
பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா வெற்றிக்காக ஆட வேண்டும் என்ற கொள்கையை உடையவர்கள் என சொல்லப்பட்டு வந்த நிலையில், அவர்களால் தான் இந்த மோசமான நிலை. அவர்களுக்கு நன்றி என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
மற்றொரு ரசிகரோ, ரோஹித் சர்மா 12 ஆண்டுகளில் சிறிய தோல்விகள் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லி இருக்கிறார். அந்த சிறிய தோல்விகள் என்னென்ன என்று பார்க்கலாம் என பட்டியலிட்டு இருக்கிறார்.
"46 ரன்னுக்கு இந்திய மண்ணில் இந்திய அணி ஆல் அவுட் ஆகி இருக்கிறது. 12 ஆண்டுகளுக்குப் பின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்து இருக்கிறது. 27 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை மண்ணில் ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கிறது. அதிலும் அந்த தொடரில் இந்திய அணி ஒயிட் வாஷ் செய்யப்பட்டது. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி சந்தித்து இருக்கிறது. இந்த மோசமான தோல்விகளால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இந்தியா இழக்க நேரிடலாம். இதுதான் சிறிய தோல்வியா?" என கேட்டு இருக்கிறார்.
மற்றொரு ரசிகரோ, "12 ஆண்டுகளாக எந்த இந்திய அணியும் சாதிக்க முடியாததை ரோஹித் சர்மா அணி சாதித்து இருக்கிறது." என இந்திய அணியின் தோல்வியை கிண்டல் அடித்து இருக்கிறார்.