துபாய்: இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 29 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இவரின் விக்கெட்டை வீழ்த்த 3 முறை வாய்ப்பு அமைந்த போதும், அவர் தப்பித்து கொண்டே இருந்த நிலையில், குல்தீப் யாதவ் வீசிய முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் நியூசிலாந்து அணி தரப்பில் வில் யங் - ரச்சின் ரவீந்திரா கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இவர்கள் இருவரும் முதல் 3 ஓவர்கள் நிதானம் காட்டிய நிலையில், ஹர்திக் பாண்டியா வீசிய 4வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 16 ரன்களை விளாசினார். தொடர்ந்து முகமது ஷமி பவுலிங்கிலும் அபாரமான ஷாட் மூலமாக 2 அசத்தல் பவுண்டரிகளை விளாசினார். இதனால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 7 ஓவர்களிலேயே 51 ரன்களை கடந்தது.
இதனிடையே முகமது ஷமி பவுலிங்கில் அவரிடம் ரச்சின் ரவீந்திரா கேட்ச் ஒன்றை கொடுத்தார். ஆனால் அந்த கேட்ச் முகமது ஷமியின் சுண்டு விரலில் அடித்து சென்றது. இதனைத் தொடர்ந்து ரச்சின் விக்கெட்டை தூக்க வருண் சக்கரவர்த்தி கொண்டு வரப்பட்டார். அவரின் பந்தில் லெக் சைடில் அவர் அடித்த ஸ்வீப் ஷாட் மேலே உயரப் பறந்தது.
இதனால் அங்கு ஃபீல்டிங் நின்றிந்த ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்துவிட்டார் என்று பார்க்கப்பட்டது. அதற்கேற்ப ஸ்ரேயாஸ் ஐயரும் பந்தை நோக்கி விரைவாக ஓடி வர, கடைசி நேரத்தில் கைகளில் விழுந்த பந்தை கோட்டைவிட்டார். அதேபோல் வருண் சக்கரவர்த்தி வீசிய ஒரு பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து நடுவர் அவுட் கொடுத்த போதும், டிஆர்எஸ் மூலமாக தப்பினார்.
இப்படி இவரின் விக்கெட்டை வீழ்த்த 3 முறை வாய்ப்பு கிடைத்த போது, அவர் பக்கத்தில் அதிர்ஷ்ட தேவதை அமர்ந்திருந்ததால் தப்பித்து கொண்டே இருந்தார். அபாரமான ஃபார்மில் இருப்பதால், அவருக்கு 3 முறை சான்ஸ் கொடுத்தது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பவர் பிளே ஓவர்கள் முடிந்து குல்தீப் யாதவ் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார்.
குல்தீப் யாதவ் வீசிய முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா 29 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து போல்டாகி வெளியேறினார். குல்தீப் யாதவ் வீசிய கூக்ளி பந்தை கணிக்காமல் ரச்சின் ரவீந்திரா ஷாட் ஆடியதே அவரின் தவறாக மாறியது. இதனால் நியூசிலாந்து அணி இரு தொடக்க வீரர்களையும் இழந்து தடுமாறி வருகிறது.