துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், இதற்கு டேரில் மிட்சலின் ஆமை வேக இன்னிங்ஸ் தான் காரணம் என சமூக வலைதளங்களில் பலரும் அவரது ஆட்டத்தை சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர்.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியாவின் ஓவர்களில் நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக ரன் சேர்த்தார். அதன் பின் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீசிய போது, நியூசிலாந்து அணி ரன் சேர்க்கத் திணறியது. விக்கெட்டுகளையும் சீரான இடைவெளியில் இழந்தது.

அப்போது நான்காம் வரிசையில் இறங்கிய டேரில் மிட்செல், விக்கெட் விழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நிதானமாக விளையாடினார். ஆனால், ஒரு கட்டத்தில் அவர் சில பவுண்டரிகளையாவது அடித்து இருக்க வேண்டும். ஆனால், நிறைய டாட் பால்களை ஆடிக்கொண்டே சென்றார். 91 பந்துகளில் தான் டேரில் மிட்செல் 50 ரன்கள் எடுத்தார்.
ஐசிசி இறுதிப் போட்டி வரலாற்றில் இதுவே மிக நிதானமான அரை சதமாகும். அதன் பின்னராவது சற்று வேகம் எடுப்பார் என எதிர்பார்த்த நிலையில், 101 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார் டேரில் மிட்செல். அவர் மூன்று பவுண்டரிகள் மட்டுமே அடித்திருந்தார்.
அவரது ஆமை வேக ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 45வது ஓவரில் தான் 200 ரன்களை எட்டியது. பொதுவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுபோல ஆமை வேக ஆட்டத்தை ஐபிஎல் தொடரில் விளையாடும் என்ற ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அதற்கு முக்கிய காரணம் துபாய் ஆடுகளத்தை போலவே இருக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானம் தான்.
அங்கும் அத்தனை எளிதில் ரன் குவிக்க முடியாது. மிடில் ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்களை சந்திக்கும் போது நிதானமாகத்தான் ரன் சேர்க்க முடியும். அதே சிஎஸ்கே அணியில் ஆடிய டேரில் மிட்செல் தான் தற்போது நியூசிலாந்து அணியில், சேப்பாக்கம் மைதானத்தை ஒத்திருக்கும் துபாய் மைதானத்தில் ஆமை வேக ஆட்டத்தை ஆடி இருக்கிறார். அப்படி ஆடி தனது அணியை கவிழ்த்து விட்டார் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
நியூசிலாந்து அணி 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. டேரில் மிட்செல் சற்று அதிக வேகத்தில் ரன் சேர்த்திருந்தால், கூடுதலாக ஒரு 20 ரன்களையாவது சேர்த்து இருந்தாலும் அந்த அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். 252 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி 49வது ஓவரில் எட்டி வெற்றி பெற்றது.