அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தித் தொடர்ந்து இரண்டாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. சொந்த மண்ணில் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் திளைத்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது எதிர்கால லட்சியம் குறித்தும், அணியின் வெற்றிக்குக் காரணமான மனநிலை குறித்தும் உருக்கமாகப் பேசியுள்ளார்.
வெற்றிக்குப் பின் வர்ணனையாளர்களிடம் பேசிய ஹர்திக் பாண்டியா, தனது கிரிக்கெட் பயணம் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் பேசினார். "எனக்கு இன்னும் 10 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடும் ஆற்றல் உள்ளது என்று நம்புகிறேன். இந்த 10 ஆண்டுகளில் மேலும் 10 ஐசிசி கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய லட்சியம்.

இந்தியாவில், அதுவும் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் உலகக் கோப்பையை வெல்வது மிகவும் உணர்ச்சிகரமான ஒன்று. மக்களின் ஆரவாரம் மெய்சிலிர்க்க வைக்கிறது. நேற்றே நாங்கள் தான் சாம்பியன் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. வேறு எந்த முடிவும் வரும் என்று நான் நினைக்கவில்லை. தோல்வி பற்றிய எண்ணமே எனக்குத் துளியும் வரவில்லை. கடவுளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் இறுதிக்கட்டப் பரபரப்பு குறித்தும் பாண்டியா நினைவுகூர்ந்தார். "இங்கிலாந்துக்கு எதிராக நான் 19வது ஓவரை வீசியபோது, 2024 உலகக் கோப்பை இறுதிப் போட்டிதான் என் நினைவுக்கு வந்தது. அந்த அனுபவம் எனக்குக் கைகொடுத்தது. அதேபோல, இறுதிப் போட்டிக்கு முன்பு இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மாவிடம் நான் ஒரு விஷயத்தைச் சொன்னேன். நீங்கள் பேட்டிங் செய்யச் செல்லும்போது, பழைய நல்ல நினைவுகளை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு நேர்மறையான ஆற்றலைக் கொடுக்கும் என்று அறிவுரை கூறினேன்" என்று தெரிவித்தார்.

சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டது குறித்துப் பாண்டியா தத்துவார்த்தமாகப் பதிலளித்தார். "வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும் பாடம் இதுதான். நாம் கடினமாக உழைக்க வேண்டும். அதேசமயம் மற்றவர்களின் வெற்றியைக் கண்டு மகிழ்ச்சியடைய வேண்டும். பொறாமைப்படாமல் மற்றவர் மகிழ்ச்சியில் பங்கெடுத்தால், கடவுள் நமக்கான வாய்ப்பை நிச்சயம் வழங்குவார்.

இது எங்கள் அணிக்கு மட்டுமல்ல, நம் நாட்டு மக்கள் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். அமைதியாக இருந்து உழைத்தால் வெற்றி நிச்சயம் உங்களைத் தேடி வரும். சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.