துபாய்: நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் வீரரான கேன் வில்லியம்சன் 14 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பவுலிங்கில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். குல்தீப் யாதவ் கொடுத்த முதல் ஓவரிலேயே கேன் வில்லியம்சன் டவுன் தி டிராக் இறங்கி வந்து ஆடியதை கணித்து, 2வது ஓவரில் லெந்தை கொஞ்சம் மாற்றி வீசி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடி வரும் நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திராவின் அதிரடியான ஆட்டத்தால் 10 ஓவர்களில் 69 ரன்களை குவித்திருந்தது. இதன்பின் குல்தீப் யாதவ் வீசிய முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா 37 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதன்பின் நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் வீரரான கேன் வில்லியம்சன் களமிறங்கினார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் சதம் விளாசி இருந்ததால், அவரின் விக்கெட்டை விரைவாக வீழ்த்த வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருந்தது. குறிப்பாக இந்திய அணியின் ஸ்பின்னர்களுக்கு இருந்தது.
ஏனென்றால் ஸ்பின்னர்களை சர்வ சாதாரணமாக கணித்து ஆடுவதில் வில்லியம்சன் கில்லாடியான பேட்ஸ்மேன். அவர் பேட்டிங் களமிறங்கிய போது குல்தீப் யாதவ் பவுலிங் செய்தார். 11வது ஓவரின் 4வது பந்தை கொஞ்சம் ஃபுல்லராக வீசினார். அதனை வில்லியம்சன் டவுன் தி டிராக் இறங்கி வந்து குல்தீப் யாதவின் வலது பக்கம் தூக்கி அடித்தார்.
அந்த பந்து காற்றில் பறந்த போதும், குல்தீப் யாதவால் பிடிக்க முடியவில்லை. இதனை கவனித்த குல்தீப் யாதவ், மீண்டும் அடுத்த ஓவரை வீசி வந்தார். அப்போது கேன் வில்லியம்சனை மீண்டும் அதேபோன்ற ஷாட்டை ஆட வைக்க வேண்டும் என்று குறியாக இருந்தார். அதற்கேற்ப கேன் வில்லியம்சன் டவுன் தி டிராக் இறங்கி வர, இம்முறை ஃபுல்லர் லெந்தில் வீசாமல் மிடில் லெந்தில் பந்தை வீசினார்.
இதனால் கேன் வில்லியம்சன் அடித்த பந்து நேராக குல்தீப் யாதவ் கைகளில் கேட்சானது. இதனால் கேன் வில்லியம்சன் 14 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ் பவுலிங்கில் கேன் வில்லியம்சன் 3வது முறையாக ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இதனால் நியூசிலாந்து அணி 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.