IND vs NZ Final: டி20 உலககோப்பை வரலாற்றில் யாருமே செய்யாத சாதனை.. இந்திய அணி டாப் 3 வீரர்கள் அபூர்வ ரெக்கார்ட்
அகமதாபாத்: 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு இந்திய அணி பேட்டிங்கில் வரலாறு படைத்தது. இந்த அரிய நிகழ்வில், இந்தியாவைச் சேர்ந்த டாப் வரிசையில் மூன்று முன்னணி பேட்ஸ்மேன்கள் தலா 50 ரன்களைக் கடந்தனர். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இப்படி ஒஐ சாதனை நடைபெற்று இருப்பது இதுவே முதல் முறையாகும். இது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், சஞ்சு சாம்சன் 45 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை கடுமையாகத் தாக்கினார். அவர் 33 பந்துகளில் அரைசதம் எட்டி, அணியின் ரன் வேகத்தை நிலைநிறுத்தினார். 15.1 ஓவர்களில் இந்திய அணி 203 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து சாம்சன் ஆட்டமிழந்தார்.

கடந்த சில போட்டிகளாக தடுமாறிய அபிஷேக் பைனலில், ஒரு வெறித்தனமான இன்னிங்ஸை விளையாடி அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சனுக்கு அபாரமான ஆதரவை அளித்தார். அவர் 18 பந்துகளில் பிரமிக்க வைக்கும் வகையில் அரைசதத்தை அடித்தார். மொத்தமாக 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 7.1 ஓவர்களில் 98 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தபோது அபிஷேக் ஷர்மா வெளியேறினார்.
இதே போன்று 3வது வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். அவர் வெறும் 23 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இறுதியாக, 25 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 15.5 ஓவர்களில் இந்திய அணி 204 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தபோது, இஷான் கிஷன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக, ஒரு அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் தலா 50 ரன்களுக்கு மேல் எடுத்த சாதனைக்கு சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய மூவரும் வித்திட்டனர். இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒரு மாபெரும் சாதனையாகும்.


Click it and Unblock the Notifications