துபாய்: துபாய் மண்ணில் இந்திய அணியை வீழ்த்தவே முடியாது என்ற புள்ளிவிவரம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோத உள்ள நிலையில், துபாய் மண்ணில் இதுவரை இந்திய அணி எத்தனை ஒருநாள் போட்டிகளில் விளையாடி, அதில் எத்தனை வெற்றிகளைப் பெற்றுள்ளது என அந்தப் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது.
இதுவரை துபாயில் இந்திய அணி இரண்டு ஒருநாள் தொடர்களில் விளையாடி உள்ளது. 2018ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் துபாயில் நடைபெற்றது. அப்போது இந்திய அணி ஒரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டை செய்தது. மற்ற போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றது.

அப்போது ஆறு போட்டிகளில் விளையாடிய இந்திய அணி, அதில் 5 வெற்றிகள் மற்றும் ஒரு டை செய்தது. அப்போது ஆசிய கோப்பையையும் இந்திய அணி வென்றது. அதைத் தொடர்ந்து தற்போது 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அங்கு நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது.
அந்த நான்கிலும் வெற்றி பெற்றுள்ளது. குரூப் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய அணி, அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் இதே துபாய் மண்ணில் விளையாடி வெற்றி பெற்று இருக்கிறது.
தொடர்ந்து பத்து போட்டிகளில் துபாய் மண்ணில் தோல்வியே சந்திக்காமல் இருந்துள்ளது இந்தியா. எனவே, இறுதிப் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும், நியூசிலாந்து அணியை வீழ்த்தும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்த மைதானத்தில் இந்திய அணி வங்கதேசத்தை மூன்று முறையும், பாகிஸ்தான் அணியை மூன்று முறையும் வீழ்த்தியுள்ளது. ஹாங்காங் அணியை ஒரு முறையும், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை ஒரு முறையும் வீழ்த்தி உள்ளது.
தற்போது துபாய் மைதானத்தில் இரண்டாவது முறையாக நியூசிலாந்து அணியை இறுதி போட்டியில் சந்திக்க உள்ள நிலையில், அதிலும் இந்திய அணியே வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.. துபாய் மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் சுழற் பந்துவீச்சாளர்கள் தான்.
இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் துபாய் மைதானத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்திய பேட்ஸ்மேன்கள் இங்குள்ள சூழ்நிலையை தெளிவாக புரிந்து கொண்டு நிதானமாக பேட்டிங் செய்கின்றனர். இந்த இரண்டுமே இந்திய அணியின் வெற்றி நடைக்கு முக்கிய காரணமாக உள்ளது. இது இறுதிப் போட்டியிலும் தொடர வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.