அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இந்த மாபெரும் வெற்றிக்கு இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்தனர். ஆனால், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் இஷான் கிஷன் இந்த இறுதிப் போட்டியில் களமிறங்குவதற்கு முன்பு ஒரு மிகப்பெரிய தனிப்பட்ட சோகத்தைச் சந்தித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தனது நெருங்கிய உறவினரின் மரணச் செய்தியைக் கேட்டும், அந்தத் துயரத்தைக் கடந்து தேசத்துக்காக விளையாடி அவர் கோப்பையை வென்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது வெள்ளிக்கிழமை இஷான் கிஷனின் உறவினர் (Cousin Sister - சகோதரி உறவு) மற்றும் மைத்துனர் ஆகியோர் கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சியான செய்தி அவருக்குக் கிடைத்தது. இந்தத் துயரச் சம்பவம் கிஷனின் குடும்பத்தைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விபத்து காரணமாக, இஷான் கிஷனின் தந்தை பிரணவ் பாண்டேவால் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியைக் காண வர முடியவில்லை. இஷான் கிஷனும் தனது குடும்பத்தினருடன் இருக்க விரும்பியுள்ளார். ஆனால், தேசத்துக்காக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட வேண்டிய முக்கியக் கடமை இருந்ததால் அவரால் செல்ல முடியவில்லை.
இது குறித்துப் பேசிய அவரது தந்தை பிரணவ் பாண்டே, "எங்களுக்கு ஒரு பெரிய துயரம் நடந்துவிட்டது. நாங்கள் அனைவரும் பெரும் சோகத்தில் உள்ளோம். இஷான் எங்களைப் பார்க்க வர விரும்பினார், ஆனால் இறுதிப் போட்டி இருந்ததால் அவராலும் வர முடியவில்லை. அவர் மிகவும் மனமுடைந்து காணப்படுகிறார்" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இந்தச் சோகச் செய்தி இஷான் கிஷனின் பயிற்சியிலும் பிரதிபலித்தது. வழக்கமாகப் பயிற்சி முகாமில் மிகவும் சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் காணப்படும் அவர், இறுதிப் போட்டிக்கு முந்தைய பயிற்சியில் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். மற்ற நாட்களைப் போல அதிக நேரம் அவர் பேட்டிங் பயிற்சி செய்யவில்லை. இந்திய அணி வீரர்கள் பலரும் அவரிடம் சென்று ஆறுதல் கூறி அவருக்குத் தோள் கொடுத்தனர்.
இவ்வளவு பெரிய தனிப்பட்ட இழப்பு மற்றும் மன அழுத்தத்திற்கு மத்தியிலும், ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் இஷான் கிஷன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மூன்றாவது வரிசையில் களமிறங்கிய அவர், எந்தவிதப் பயமுமின்றி நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்கொண்டார். வெறும் 25 பந்துகளில் 54 ரன்கள் குவித்து, இந்திய அணியின் இமாலய ஸ்கோருக்கு முக்கியப் பங்காற்றினார்.

அரைசதம் அடித்த பிறகு, தனது பேட்டை வானத்தை நோக்கிக் காண்பித்து, உயிரிழந்த தனது உறவினர்களுக்கு அந்த இன்னிங்ஸை அவர் அர்ப்பணித்தார். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் அவர் இரண்டு மிக முக்கியமான கேட்சுகளைப் பிடித்து ஆபத்தான ரச்சின் ரவீந்திரா மற்றும் டிம் செய்ஃபெர்ட் விக்கெட் கிடைக்க காரணமாக இருந்தார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரில் 9 இன்னிங்ஸ்களில் 317 ரன்கள் குவித்த இஷான் கிஷன், அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். தனிப்பட்ட துயரத்தையும் தாண்டி தேசத்துக்காக விளையாடிய இஷான் கிஷனை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
