மும்பை: சமீபத்தில் முடிவடைந்த 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியில் முக்கியப் பங்காற்றிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷனை அணியில் சேர்ப்பதற்கு முன்பு, கேப்டன் சூர்யகுமார் யாதவ் அவரிடம் தொலைபேசியில் பேசிய உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதற்கு முன்பு, இஷான் கிஷனைத் தொடர்புகொண்டு சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார். இது குறித்துப் பேசிய சூர்யகுமார் யாதவ், "அணியைத் தேர்வு செய்வதற்கு முன்பு இஷான் கிஷனுக்கு போன் செய்தேன். அப்போது அவரிடம், எனக்காக உலகக் கோப்பையை வென்று தருவாயா என்று கேட்டேன். அதற்கு அவர், என் மீது மட்டும் கொஞ்சம் நம்பிக்கை வையுங்கள், நான் நிச்சயமாகச் செய்து காட்டுகிறேன் என்று பதிலளித்தார். அவர் சொன்னபடியே உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்டு எங்களை ஏமாற்றவில்லை" என்று கூறியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை இஷான் கிஷன் இழந்திருந்தார். கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்திலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். அதன் பிறகு உள்ளூர் போட்டிகளுக்குத் திரும்பி, அங்குத் தனது கடின உழைப்பை வெளிப்படுத்தினார். உள்ளூர் ஆட்டங்களில் தொடர்ந்து ரன்களைக் குவித்து மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்த அவர், தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பைச் சரியாகச் செய்து முடித்துள்ளார் என்று சூர்யகுமார் யாதவ் அவரைப் பாராட்டியுள்ளார்.

2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் முன்வரிசை பேட்ஸ்மேனாக இஷான் கிஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் விளையாடிய ஒன்பது போட்டிகளில் மூன்று அரைசதங்கள் உட்பட 317 ரன்களைக் குவித்தார். அவரது ரன் குவிக்கும் வேகம் 193 ஆக இருந்தது.

இந்தத் தொடரில் இந்திய அணியின் சார்பாக அதிக ரன் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். முதல் இடத்தில் சஞ்சு சாம்சன் 321 ரன்களுடன் தொடர் நாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டனின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் இஷான் கிஷன் செயல்பட்டு உலகக் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்துள்ளார்.