அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி மிகச் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றது. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த நியூசிலாந்து அணியின் வியூகங்களைச் சுக்குநூறாக உடைத்து, இந்தியத் தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் உச்சமாக நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் லாக்கி ஃபெர்குசன் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டிகளின் மிக மோசமான ஓவரை வீசினார்.
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர், இந்திய அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு புதிய திட்டத்தைக் கையில் எடுத்தார். தொடக்க ஓவர்களிலேயே பேட்ஸ்மேன்களுக்கு செட் ஆகக் கூடாது என்பதற்காக, முதல் நான்கு ஓவர்களையும் நான்கு வெவ்வேறு பந்துவீச்சாளர்களைக் கொண்டு வீசச் செய்தார். ஆனால், இந்தத் திட்டம் நியூசிலாந்து அணிக்கே மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்தியத் தொடக்க வீரர்கள் இந்த மாற்றங்களைப் பொருட்படுத்தாமல் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசினர்.

நியூசிலாந்து அணிக்கு மிகப் பெரிய சோதனையாக அமைந்தது ஆட்டத்தின் நான்காவது ஓவர் தான். அந்த ஓவரை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லாக்கி ஃபெர்குசன் வீசினார். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றிலேயே வீசப்பட்ட மிக மோசமான ஓவர்களில் ஒன்றாக இது அமைந்தது. ஃபெர்குசன் வீசிய அந்த ஓவரில் மட்டும் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா கூட்டணி 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசியது. போதாக்குறைக்கு ஃபெர்குசன் பதற்றத்தில் 3 முறை வைடு பந்துகளை வீசினார். இதன் மூலம் அந்த ஒரே ஓவரில் இந்திய அணிக்கு 24 ரன்கள் கிடைத்தன. இது இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது.

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்களை (24 ரன்கள்) விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் லாக்கி ஃபெர்குசன் தற்போது இணைந்துள்ளார். இதற்கு முன்பு இரண்டு முறை மட்டுமே இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
2016 இறுதிப் போட்டி: இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகக் கடைசி ஓவரில் 24 ரன்களை (முதல் 4 பந்துகளில்) விட்டுக்கொடுத்தார்.
2024 இறுதிப் போட்டி: இந்திய வீரர் அக்சர் பட்டேல், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 24 ரன்களை வாரி வழங்கினார்.
2026 இறுதிப் போட்டி: தற்போது லாக்கி ஃபெர்குசன் இந்தியாவுக்கு எதிராக 24 ரன்களைக் கொடுத்து இந்த மோசமான சாதனையைப் பகிர்ந்துள்ளார்.

இந்தத் தொடர் முழுவதும் போதிய ரன்கள் எடுக்காமல் விமர்சனத்திற்குள்ளான இளம் வீரர் அபிஷேக் சர்மா, இறுதிப் போட்டியில் தனது விஸ்வரூபத்தை வெளிப்படுத்தினார். கடந்த போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த அவர், இந்தப் போட்டியில் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுத்தார். பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசி, 18 பந்துகளில் அரைசதம் கடந்து இறுதிப் போட்டியில் தான் ஒரு மேட்ச் வின்னர் என்பதை நிரூபித்தார்.