அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் முன்கூட்டியே கணித்திருந்தார். ஆனால் அவரது கணிப்பு தவறாக முடிந்தது. இந்நிலையில், இறுதிப்போட்டியில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் எடுத்த சில தவறான முடிவுகள்தான் அந்த அணியின் தோல்விக்கு முக்கியக் காரணம் என அமீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியைக் குறைந்த ரன்களுக்குள் சுருட்டலாம் என்ற நோக்கத்தில் அந்த அணி களமிறங்கியது. ஆனால், ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கேப்டன் சாண்ட்னர் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்திய விதம் குறித்து அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகத் தடுமாறுவார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது, அவருக்கு எதிராக முழுமையாகச் சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தாமல், வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபியை பந்துவீச அழைத்தது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. பந்துவீச்சாளர்களை மாற்றிய விதம் எனக்குச் சற்றும் உடன்பாடாக இல்லை. இது மிகவும் தவறான ஒரு முடிவு" என்று தெரிவித்தார்.
நியூசிலாந்து அணி பந்துவீசிய விதம் குறித்தும் அமீர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். "நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர். அவர்கள் வீசிய வைடு பந்துகளையே இந்திய வீரர்கள் சிக்ஸர்களாக மாற்றினார்கள். இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தை நான் குறை கூறவில்லை, அவர்களுக்குரிய பாராட்டுகள் கிடைக்க வேண்டும்.
ஆனால் நியூசிலாந்து அணி இவ்வளவு மோசமாகச் செயல்பட்டதை நான் பார்த்ததே இல்லை. நான் 2005 ஆம் ஆண்டில் இருந்து நியூசிலாந்து அணியின் ஆட்டத்தைக் கவனித்து வருகிறேன். அவர்கள் இவ்வளவு பெரிய அழுத்தத்தில் சிக்கித் தவித்ததை நான் இதற்கு முன் கண்டதில்லை" என்று அமீர் கூறினார்.
பொதுவாக கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சாளர்கள் தான் ஒரு அணிக்குத் தொடர்களை வென்று தருவார்கள் என்ற ஒரு கருத்து பரவலாக உள்ளது. அமீரும் பலமுறை இதையே கூறியிருந்தார். ஆனால், இந்திய அணி அந்த எண்ணத்தை மாற்றிவிட்டதாக அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
"பந்துவீச்சாளர்கள் தான் கோப்பையை வென்று தருவார்கள் என்ற பழைய பார்வையை இந்திய அணி உடைத்துவிட்டது. சிறந்த பேட்ஸ்மேன்களாலும் ஒரு பெரிய தொடரை வென்று தர முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துவிட்டனர். தட்டையான ஆடுகளங்களில் கூட, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி என இரண்டு முக்கியமான ஆட்டங்களிலும் இந்திய அணி 250 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியுள்ளது. இதற்காக இந்திய அணிக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்" என்று அமீர் தனது கருத்தை நிறைவு செய்தார்.