அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் தோற்கும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் மீண்டும் தனது கணிப்பை வெளியிட்டு வம்பிழுத்து இருக்கிறார். இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும் நிலையில் இந்திய ரசிகர்களை சீண்டும் வகையில் இவ்வாறு பேசி இருக்கிறார்.
இந்த உலகக்கோப்பை தொடர் தொடங்கியதிலிருந்தே இந்திய அணிக்கு எதிராகத் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை முகமது அமீர் தெரிவித்து வருகிறார். முதலில் சூப்பர் 8 சுற்றிலிருந்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாது என்று கூறியிருந்தார். ஆனால் இந்தியா அரையிறுதிக்குச் சென்றது. பின்னர் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோற்றுவிடும் என்றார். அதையும் பொய்யாக்கி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
தற்போது இறுதிப் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறாது என்று அவர் உறுதியாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்திய அணி ஒரு முழுமையான அணியாகச் செயல்படவில்லை என்றும், நியூசிலாந்து அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றி குறித்துப் பேசிய முகமது அமீர், அணி நிர்வாகம் ஒரு சில வீரர்களை மட்டுமே சார்ந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். "இந்திய அணியைப் பொறுத்தவரை அவர்கள் இரண்டு வீரர்களின் தனிப்பட்ட திறமையால் மட்டுமே வெற்றிகளைப் பெற்று வருகின்றனர். பேட்டிங்கில் சஞ்சு சாம்சன் மற்றும் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மட்டுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். மற்ற வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை.
ஆனால் நியூசிலாந்து அணியைப் பாருங்கள். அவர்கள் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு முழுமையான குழுவாகச் செயல்பட்டனர். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் அவர்கள் ஒரு யூனிட்டாகச் செயல்படுகிறார்கள். அதனால் இந்தியாவை விட நியூசிலாந்து அணிதான் பலமாகத் தெரிகிறது," என்று அமீர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிப் போட்டி நடைபெறும் அகமதாபாத் ஆடுகளம் குறித்தும் அமீர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். "நரேந்திர மோடி மைதானத்தின் தன்மை நியூசிலாந்து அணிக்குச் சாதகமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். பந்துவீச்சுத் துறையை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியாவை விட நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

இந்திய அணியில் பும்ராவைத் தவிர்த்துப் பார்த்தால், மற்ற பந்துவீச்சாளர்கள் யாரும் ஃபார்மில் இல்லை. வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ரன்களைக் கட்டுப்படுத்தத் திணறி வருகின்றனர். பும்ராவை மட்டுமே இந்தியா அதிகம் நம்பியுள்ளது. ஆனால் நியூசிலாந்து பந்துவீச்சுப் படை மிகவும் பலமாக உள்ளது. எனவே நியூசிலாந்து அணி கோப்பையை வெல்லும் என்று நான் நம்புகிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்தப் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும், இந்தியத் தரப்பில் ஹர்திக் பாண்டியா ஓரளவுக்குச் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புள்ளதாகவும் அமீர் கணித்துள்ளார். சொந்த மண்ணில் இந்தியா கோப்பையைத் தக்கவைக்குமா அல்லது அமீரின் கணிப்பு இம்முறையாவது பலிக்குமா என்பது போட்டியின் முடிவில் தெரிந்துவிடும்.