துபாய்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. துபாயில் நடக்க உள்ள இந்த இறுதிப் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடிய அதே பிட்ச் தான் பயன்படுத்தப்பட உள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடி வெற்றி பெற்றிருந்தது. அதே பிட்ச் தான் தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள இறுதிப் போட்டிக்கும் வழங்கப்பட உள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான குரூப் சுற்றுப் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசியது. அப்போது பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 49.4 ஓவர்களில் 241 ரன்கள் மட்டும் எடுத்து இருந்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 42.3 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. எனவே அந்த பிட்ச் இந்திய அணிக்கு சாதகமான ஒன்றுதான்.
மேலும் இதே மைதானத்தில் தான் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் இந்திய அணி விளையாடியிருந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 249 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது. எனவே, துபாய் மைதானம் மற்றும் பிட்ச் இந்திய அணிக்கு சாதகமாகத்தான் உள்ளது.
இந்த பிட்சில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு அதிக ஒத்துழைப்பு இருக்கும் என்பதால், நிச்சயமாக இந்திய அணி நான்கு ஸ்பின்னர்களுடன் தான் களமிறங்கும். நியூசிலாந்து அணியும் அதிக ஆல்ரவுண்டர்களை சுழற்பந்துவீச்சாளர்களாக பயன்படுத்த திட்டமிடும்.
அந்த வகையில் இந்த போட்டிக்கான பிட்ச், பிளேயிங் லெவனில் இரண்டு அணிகளும் அதிக சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வதற்கு முக்கிய காரணியாக இருக்கும். இந்திய அணி ஏற்கனவே நான்கு ஸ்பின்னர்கள் திட்டத்தை செயல்படுத்தி வருவதால், பிளேயிங் லெவனில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப் போட்டி மார்ச் 9 அன்று மதியம் 2:30 மணிக்கு துவங்கி நடைபெறும். டாஸ் மதியம் 2 மணிக்கு போடப்படும்.