துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா அம்பயர் அவுட் கொடுத்த உடன் டிஆர்எஸ் முறையில் ரிவ்யூ செய்து அவுட் ஆகும் வாய்ப்பில் இருந்து தப்பினார். அவர் ஆட்டத்தில் மிகவும் துடிப்பாக கவனமாக இருந்ததை அடுத்து, ரிவ்யூ முடிவை எடுத்து தப்பினார்.
அதனால், இந்திய வீரர்கள் நொந்து போனார்கள். ரச்சின் அதிரடியாக ஆடிய நிலையில் மூன்று முறை அவுட் ஆகும் வாய்ப்பில் இருந்து தப்பினார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியின் துவக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் அபாரமாக ரன் சேர்த்தனர். இருவரும் 7 ஓவர்களில் 51 ரன்களை எடுத்து இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்து இருந்தனர். ரச்சின் ரவீந்திரா அதிரடியாக ஆடினார். முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியாவின் ஓவர்களில் சரமாரியாக பவுண்டரிகளை விளாசினார். அவரது விக்கெட்டை வீழ்த்த வேண்டிய அழுத்தம் அதிகரித்தது.
ஏழாவது ஓவரில் முகமது ஷமி, ரச்சின் கொடுத்த கேட்ச் ஒன்றை தவறவிட்டார். அதற்கு அடுத்த ஓவரில் வருண் சக்கரவர்த்தி வீசிய முதல் பந்தை ரச்சின் ரவீந்திரா அடிக்க முயன்றார். அந்த பந்தை கே.எல். ராகுல் கேட்ச் பிடித்ததை அடுத்து, இந்திய அணி சார்பில் அம்பயரிடம் அவுட் கேட்கப்பட்டது. கள அம்பயர் பால் ரைபிள் உடனடியாக அவுட் கொடுத்தார்.
ஆனால், ரச்சின் ரவீந்திரா சற்றும் யோசிக்காமல் ரிவ்யூ செய்தார். அப்போது பந்து லெக் ஸ்டம்பை தாண்டி செல்வது தெரிந்தது. மேலும் ரச்சின் ரவீந்திரா பந்தை அடிக்க முயன்றாலும், அவரது பேட்டோ அல்லது கிளவுஸோ பந்தின் மீது உராயவில்லை என்பது அல்ட்ரா எட்ஜில் உறுதியானதை அடுத்து, அவுட் முடிவு திரும்ப பெறப்பட்டது. மேலும், பந்து லெக் திசையில் சென்றதால் வைடு கொடுக்கப்பட்டது.
அப்போது ரச்சின் ரவீந்திரா 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். இந்த முக்கியமான முடிவு மூலம் ரச்சின் ரவீந்திரா தப்பினார். அதே ஓவரில், அதற்கு அடுத்த பந்திலேயே ரச்சின் ரவீந்திராவுக்கு மீண்டும் ஒரு அதிர்ஷ்டம் கிடைத்தது.
ஸ்ரேயாஸ் ஐயர் ரச்சின் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த நிலையில், வில் யங் ஆட்டம் இழந்தார். அவர் 23 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து இருந்தார். வருண் சக்கரவர்த்தி முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பின் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ரச்சின் 29 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது தான் இந்திய வீரர்கள் நிம்மதி அடைந்தனர்.