துபாய்: நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கலாக இருப்பார் என முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ரச்சின் ரவீந்திராவை சமாளிப்பதற்கு இந்திய அணி தனியாக திட்டமிட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.
ரச்சின் ரவீந்திராவிடம் அதிக பலவீனங்கள் இல்லை என்பதால் அவருக்கு எப்படி பந்து வீச வேண்டும் எனவும் சஞ்சய் பங்கர் சுட்டிக்காட்டி இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரச்சின் ரவீந்திரா அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

முதலிடத்தில் இருக்கும் பென் டக்கெட்டை விட ஒரு ரன் மட்டுமே குறைவாக எடுத்து இருக்கிறார். 3 இன்னிங்ஸ்களில் 226 ரன்கள் எடுத்திருக்கிறார் ரச்சின் ரவீந்திரா. மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்கள் அடித்து இருக்கிறார். இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டு சதங்கள் அடித்த ஒரே வீரர் அவர் மட்டுமே.
நியூசிலாந்து அணியின் இரண்டு வெற்றிகளுக்கு ரவீந்திராவின் சதம் முக்கிய காரணமாகவும் இருந்தது. இதுகுறித்து பேசிய சஞ்சய் பங்கர், "இந்திய அணி ரச்சின் ரவீந்திராவின் பலவீனத்தை கண்டறிய முயற்சிக்க வேண்டும். அவரிடம் எந்த பலவீனத்தையும் நாம் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. அவருக்கு ஆஃப் ஸ்டம்பில் வைடாக பந்து வீசுவதை மட்டுமே நம்மால் செய்ய முடியும்." என்றார்.
மேலும், "நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு நிச்சயம் சவால் அளிக்கும். அந்த அணியில் தரமான வீரர்கள் உள்ளனர். அவர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். இந்த இறுதிப் போட்டி இந்தியாவுக்கு 60க்கு 40 என்ற அளவில் சாதகமாக இருக்கும். நிச்சயமாக நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக சாதகங்கள் இருக்காது. அந்த அணி எந்த ஒரு சூழ்நிலைக்கு ஏற்பவும் விளையாடத் தயாராகவே இருக்கும். நிறைய திட்டங்களை வைத்திருப்பார்கள்" என்று எச்சரித்தார் சஞ்சய் பங்கர்.
இந்தியா - மற்றும் நியூசிலாந்து அணிகள் மொத உள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி மார்ச் 9 அன்று நடைபெற உள்ளது.