அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. மூன்றாவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணியின் இந்த வரலாற்றுத் தருணத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில், வர்ணனையாளர் ரவி சாஸ்திரி செய்த ஒரு சிறிய தவறு அந்த வெற்றியின் சிலிர்ப்பைக் குறைத்துவிட்டதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்த இறுதிப்போட்டியின் இறுதிக் கட்டத்தில் நியூசிலாந்து அணி தோல்வியின் விளிம்பில் இருந்தது. அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது. கடைசி விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், இந்திய அணியின் பகுதிநேர பந்துவீச்சாளர் அபிஷேக் சர்மா பந்துவீசினார்.

நியூசிலாந்து வீரர் ஜேக்கப் டஃபி அந்த பந்தை தூக்கி அடிக்க முயன்றபோது, எல்லைக்கோட்டில் நின்றிருந்த திலக் வர்மா அந்த கேட்சை மிகச் சரியாகப் பிடித்தார். இது நியூசிலாந்து அணியின் கடைசி விக்கெட் ஆகும். ஆனால், நேரடி வர்ணனையில் இருந்த ரவி சாஸ்திரி, அது கடைசி விக்கெட் என்பதையே மறந்துவிட்டார். "ஆழமான பகுதியில் கேட்ச் பிடிக்கப்பட்டுள்ளது, ஒன்பதாவது விக்கெட் விழுகிறது" என்று அவர் தவறுதலாகக் கூறினார்.
மைதானத்தில் இந்திய வீரர்கள் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கிய பிறகே, ரவி சாஸ்திரிக்கு அது கடைசி விக்கெட் என்பதும், இந்தியா உலகக் கோப்பையை வென்றுவிட்டது என்பதும் நினைவுக்கு வந்தது. அதன் பின்னரே அவர் தனது குரலை உயர்த்தி, "உண்மையில் ஆட்டம் முடிந்துவிட்டது. இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது. சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெறுகிறது" என்று திருத்திப் பேசினார்.
ஆனால், அவர் சுதாரிப்பதற்குள் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் முதல் நொடி கடந்துவிட்டது. பொதுவாக இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அந்த வினாடியில் வர்ணனையாளர்கள் கொடுக்கும் குரல் சிலிர்ப்பூட்டும் வகையில் இருக்கும். ஆனால் ரவி சாஸ்திரியின் இந்தத் தடுமாற்றம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ரவி சாஸ்திரியின் குரலுக்கு என்றுமே தனி இடமுண்டு. குறிப்பாக 2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி சிக்ஸர் அடித்து வெற்றியைத் தேடித்தந்தபோது, ரவி சாஸ்திரி கொடுத்த வர்ணனை இன்றும் ரசிகர்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதேபோன்ற ஒரு மேஜிக் குரலை இந்த முறையும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், "ஒன்பதாவது விக்கெட்" என்று அவர் தவறாகக் கூறியது சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாகி வருகிறது. பலரும் ரவி சாஸ்திரி ஆட்டத்தின் போக்கை கவனிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். வர்ணனை சொதப்பினாலும், மைதானத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா முன்னாள் கேப்டன் தோனியை ஆரத் தழுவி மகிழ்ந்த காட்சிகள் மற்றும் வீரர்களின் கொண்டாட்டங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன.