துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணமே பேட்டிங் தான்.
அடுத்து பந்துவீச்சில் அந்த அணியில் ஒரே ஒரு பலவீனம் இருந்தது. அதை வைத்து இந்திய அணி எளிதாக நியூசிலாந்தை சமாளித்து வென்றது. பேட்டிங்கில் நியூசிலாந்து செய்த தவறு மற்றும் பந்துவீச்சு பலவீனத்தை இந்தியா பயன்படுத்தியது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஏனெனில், இரண்டாவதாக சேசிங் செய்வது கடினம் என அந்த அணி நினைத்தது. இந்திய அணியில் அதிக சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் அழுத்தத்திற்கு இடையே சேசிங் செய்வது கடினமாக இருக்கும் என நியூசிலாந்து அணி நினைத்தது. அந்த எண்ணம் சரியானது தான்.
ஆனால் பேட்டிங்கில் நியூசிலாந்து அணி விரைவாக விக்கெட்களை இழந்து நிதான ஆட்டத்திற்கு மாறியது. அதுவே அந்த அணி அதிக ரன் குவிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாகவும் இருந்தது. நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கடைசி ஐந்து ஓவர்களில் மட்டுமே நியூசிலாந்து அணி 50 ரன்கள் சேர்த்தது. முதல் 45 ஓவர்களில் 201 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியாவின் ஓவர்களில் மட்டுமே ரன் குவிப்போம் என நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் உறுதியாக இருந்தனர்.
வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய நான்கு இந்திய சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் அவர்கள் நிதானமாக ஆடினர், அதிக டாட் பால்களை ஆடினர். சுமார் 154 டாட் பால்களை ஆடி எந்த ஐசிசி இறுதிப் போட்டியிலும் இல்லாத அளவுக்கு ஒரு மோசமான சாதனையை செய்தனர் நியூசிலாந்து வீரர்கள்.
நியூசிலாந்து அணி இந்தப் போட்டியில் நிச்சயமாக 270 ரன்களுக்கு மேல் எடுத்து இருக்க வாய்ப்பு இருந்தது. 40 ஆவது ஓவருக்கு பின்னர் அந்த அணி சற்று வேகம் எடுத்து இருக்க வேண்டும். ஆனால், அப்போது கிளென் பிலிப்ஸ் விக்கெட்டை இழந்ததால் நியூசிலாந்து அணி அப்போதும் அடக்கமாகவே பேட்டிங் செய்தது. அதுவே நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 251 ரன்கள் மட்டும் எடுக்க முக்கிய காரணமாக இருந்தது.
அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்த போது, ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் நியூசிலாந்து அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. எனினும் அதன் பின் சுப்மன் கில், விராட் கோலி ஆகியோரின் விக்கெட்களை அடுத்தடுத்து நியூசிலாந்து வீழ்த்தியது. ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய வந்த பின் ரன் ரேட் மிக மோசமாக சரிவை சந்தித்தது.
பின்னர் ரோஹித் சர்மா 76 ரன்கள் எடுத்த நிலையில் தாமாகவே முன் வந்து விக்கெட்டை பறி கொடுத்தார். இப்படி எல்லாம் நியூசிலாந்துக்கு சாதகமாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால், நியூசிலாந்து அணியில் ஒரு சிக்கல் மட்டும் இருந்தது. எப்படி இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்களை மட்டும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் குறிவைத்து ஆடினார்களோ, அதேதான் இந்திய பேட்ஸ்மேன்களும் செய்தனர்.
நியூசிலாந்து அணியின் வில்லியம் ஓ'ரூர்க் மற்றும் நாதன் ஸ்மித் ஆகிய இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் குறிவைத்து அடித்தனர். நாதன் ஸ்மித்துக்கு இரண்டு ஓவர்களுக்குப் பிறகு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் பவர்பிளேவில் 2 ஓவர்களில் 22 ரன்களை வாரிக் கொடுத்து இருந்தார்.
வில்லியம் ஓ'ரூர்க் தனது மூன்றாவது ஸ்பெல்லை 44 ஆவது ஓவருக்குப் பிறகு வீச வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார். அதை பயன்படுத்தி இந்திய வீரர்கள் கடைசி 5 ஓவர்களில் அதிரடியாக ரன் சேர்த்தனர். 49 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது இந்திய அணி. அதுவரை ஓவருக்கு 4.5 ரன்கள் என்ற விகிதத்தில் ரன் சேர்த்து ஆடியது நியூசிலாந்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.