மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வெல்லமுக்கிய காரணமாக இருந்தவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். இந்த தொடரில் கடைசி மூன்று முக்கிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தொடர் நாயகன் விருதையும் வென்றார். அவரது இந்த ஆட்டத்திற்கு பின்னால் உள்ள ரகசியங்களை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் பகிர்ந்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரின் தொடக்கத்தில் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் 11இல் வாய்ப்பு கிடைக்கவில்லை. போட்டிகளில் ஆட முடியாத நிலையிலும், அவர் தனது தன்னம்பிக்கையை இழக்கவில்லை. இது குறித்து பேசிய சிதான்ஷு கோடக், சஞ்சு சாம்சன் அணியில் இல்லாதபோதும் அவர் மிகவும் நம்பிக்கையுடன் காணப்பட்டார் என்று தெரிவித்தார்.

மேலும், எந்த நேரத்திலும் வாய்ப்பு வரலாம் என்பதால் தயாராக இருக்குமாறு சாம்சனிடம் அவர் கூறியுள்ளார். அதற்கு சாம்சன், நீங்கள் கவலைப்பட வேண்டாம், நான் எப்போதும் தயாராகவே உள்ளேன், அணிக்கு தேவைப்படும்போது நிச்சயம் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று நம்பிக்கையுடன் பதிலளித்துள்ளார்.
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சஞ்சு சாம்சன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 97 ரன்கள் குவித்து அணியை காப்பாற்றினார். அதனைத் தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி என இரண்டிலும் தலா 89 ரன்கள் விளாசினார். இந்த மூன்று போட்டிகளிலும் அவர் சதம் அடிக்கும் வாய்ப்பை நெருங்கினார். ஆனாலும், தனது தனிப்பட்ட சாதனைக்காக ஆட்டத்தின் வேகத்தை குறைக்காமல் அணிக்காக தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்.

சஞ்சு சாம்சனின் இந்த அர்ப்பணிப்பு குறித்து பேசிய பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்து கொண்டார். சாம்சன் தொடர்ந்து சதத்தை தவறவிட்டதால், அவரிடம் சென்று இந்த தொடரில் நீ ஒரு சதமாவது கட்டாயம் அடிக்க வேண்டும் என்று கோடக் கூறியுள்ளார்.
அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த சாம்சன், "ஒருபுறம் தனிப்பட்ட சாதனைகள் முக்கியமல்ல, அணிக்காக விளையாடுங்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள், ஆனால் மறுபுறம் என்னை சதம் அடிக்கச் சொல்கிறீர்கள், இது எப்படி சாத்தியமாகும்?" என்று கேட்டுள்ளார். சாம்சன் இதை விளையாட்டாகக் கூறினாலும், தனிப்பட்ட ரன்களைப் பற்றி சிந்திக்காமல் அணியையே முதன்மையாக நினைக்கும் இந்திய வீரர்களின் மனநிலையை இது தெளிவாகக் காட்டுகிறது என பேட்டிங் பயிற்சியாளர் கோடக் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
