அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளார். இத்தொடரில் மொத்தமாக அவர் 321 ரன்கள் குவித்து, முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். அத்துடன் ஒரு தொடரில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் முறியடித்து, மொத்தம் 24 சிக்சர்களைப் பறக்கவிட்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்நடந்த இறுதிப் போட்டியில், சாம்சன் 46 பந்துகளில் அதிரடியான 89 ரன்கள் குவித்து தனது ரன்கள் சாதனையை உறுதி செய்தார். இதன்மூலம் 2014 ஆம் ஆண்டு விராட் கோலி அடித்த 319 ரன்களைக் கடந்து, ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிக ரன்கள் என்ற சாதனை சாம்சன் படைத்துள்ளார்.

321 ரன்களுடன் கோலியின் சாதனையை சாம்சன் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் முறியடித்து வரலாறு படைத்தார். இந்த தொடரில் அதிரடியான 199.37 ஸ்ட்ரைக் ரேட்டுடன் சாம்சன் இந்த 321 ரன்களை வெறும் ஐந்து இன்னிங்ஸ்களிலேயே இந்த சாதனையை படைத்தார். T20 உலகக் கோப்பை தொடரில் குறைந்தது 250 ரன்கள் அடித்த எந்தவொரு வீரரைக் காட்டிலும் இதுவே மிகச்சிறந்த ஸ்ட்ரைக் ரேட் ஆகும்.

மேலும், சாம்சன் இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 24 சிக்சர்களை விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் மட்டும் எட்டு சிக்சர்களை அடித்து அசத்தினார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், ரோஹித் ஷர்மாவின் இந்திய சாதனையை முறியடித்த சாம்சன், இறுதியில் புதிய உலக சாதனையாக முறியடித்தார். ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் வேறெந்த வீரரும் இவ்வளவு சிக்சர்களை அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்று ஆட்டங்களில் இந்திய அணியின் முதல் 11 வீரர்களில் அவர் இடம்பெறவில்லை. அபிஷேக் ஷர்மா உடல்நலக் குறைவால் விலகியபோது, நமிபியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் ஆடி 22 ரன்கள் எடுத்தார். பின்னர், அபிஷேக் ஷர்மா பார்மை இழந்ததால், இஷான் கிஷனின் இடத்தை மாற்றி, சாம்சனுக்கு மீண்டும் அணியில் வாய்பளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்தி கொண்டார்.
மீண்டும் அணிக்குள் வந்த சாம்சன், தனது திறமையை நிரூபித்து, அணியின் நம்பிக்கையை காப்பாற்றினார். அவர் ஜிம்பாப்வேக்கு எதிராக 24 ரன்களும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய போட்டியில் ஆட்டமிழக்காமல் அபாரமான 97* ரன்களும், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 89 ரன்களும் குவித்தார். நியூசிலாந்துக்கு எதிராக இறுதிப் போட்டியில் அவர் அடித்த 89 ரன்களும் வரலாற்று சிறப்பு வாய்ந்தததாகும்.
இறுதிப் போட்டியில், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாம்சனும் அபிஷேக் ஷர்மாவும் முதல் விக்கெட்டுக்கு 43 பந்துகளில் 98 ரன்கள் சேர்த்தனர். அடுத்ததாக, இஷான் கிஷனுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 48 பந்துகளில் 105 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு மேலும் வலு சேர்த்தனர். சாம்சனின் இந்த ஆட்டத்தில் ஐந்து பவுண்டரிகளும் எட்டு சிக்சர்களும் அடங்கும்.

இத்தொடரில் ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில், பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 7 இன்னிங்ஸ்களில் 383 ரன்களுடன் முதலிடத்தைப் பிடித்தார். அவர் சாம்சனை விட 62 ரன்கள் அதிகம் அடித்திருந்தாலும், ஒரு இன்னிங்ஸ் அதிகமாக விளையாடினார். இந்திய அணியின் இஷான் கிஷன் 317 ரன்களுடன் இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். சிக்சர்கள் எண்ணிக்கையில், நியூசிலாந்தின் ஃபின் ஆலன் 8 போட்டிகளில் 20 சிக்சர்களுடன் சாம்சனுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.