அகமதாபாத்: நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாகச் டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்திய அணியின் இந்த இமாலய வெற்றியை உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து புலம்பல் சத்தம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், இந்திய அணியின் இந்த ஆதிக்கம் கிரிக்கெட்டையே அழித்துவிட்டதாகக் கடுமையாக பிதற்றி இருக்கிறார்.
ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் பேசிய சோயப் அக்தர், இந்திய அணியின் வெற்றியைப் பணக்கார வீட்டுப் பையனின் விளையாட்டோடு ஒப்பிட்டுப் பேசினார். "ஒரு தெருவில் உள்ள பணக்கார வீட்டுப் பையன், அக்கம் பக்கத்தில் இருக்கும் ஏழைப் பசங்களை எல்லாம் அழைத்து 'வாங்க கிரிக்கெட் விளையாடலாம்' என்று கூறுவதைப் போலத்தான் இந்தியா நம்முடன் நடந்துகொள்கிறது" என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "எட்டு அணிகள் இருந்தால், அதில் நான்கு அணிகளை மட்டும் வைத்துக்கொண்டு, அந்த நான்கில் இருந்து மூன்றை மீண்டும் அழைத்து விளையாடி, இறுதியில் 'பாருங்கள், நான் ஜெயித்துவிட்டேன்' என்று இந்தியா சொல்கிறது. இதுதான் தற்போது நடக்கிறது. அவர்கள் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டையே அழித்துவிட்டார்கள்" என்று தனது பொறாமையை வெளிப்படுத்தினார்.

இந்திய அணியின் வெற்றிக்கு முன்னதாகவே சோயப் அக்தர் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். இந்திய அணி பலமான அணியாக இருந்தாலும், கிரிக்கெட்டின் நலனுக்காக நியூசிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தான் விரும்புவதாக அவர் கூறியிருந்தார். ஆனால் அவரது ஆசைக்கு மாறாக இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதனைத் தாங்கிக்கொள்ள முடியாத அவர் தற்போது இந்திய அணியைக் கடுமையாகச் சாடியுள்ளார். அவரது இந்தக் கருத்து இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்திய ரசிகர்கள் பலரும், பாகிஸ்தான் அணியின் தோல்வியால் ஏற்பட்ட பொறாமையாலேயே அக்தர் இவ்வாறு பேசுவதாகப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

சோயப் அக்தர் மட்டுமல்லாமல், மற்றொரு பாகிஸ்தான் முன்னாள் வீரரான முகமது அமீரும் இந்திய அணியின் வெற்றியை விமர்சித்துள்ளார். இந்திய அணியின் இந்த வெற்றிக்கு முழு காரணமும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் தான் என்று அவர் கூறியுள்ளார். நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் போதிய அழுத்தத்தைக் கொடுக்கத் தவறியதாலேயே இந்திய பேட்ஸ்மேன்களால் எளிதாக ரன் குவிக்க முடிந்தது என்பது அவரது கருத்தாகும்.
முன்னதாக முகமது அமீர் இந்திய அணி அரையிறுதிக்கு இந்தியா முன்னேறாது என்றார். ஆனால், இந்தியா முன்னேறியது. அடுத்து அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோற்கும் என்றார். ஆனால், இந்தியா வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மீண்டும், இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணியிடம் தோற்கும் என்றார். ஆனால், இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது.

இந்தத் தொடர் முழுவதும் சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் என அனைத்து வீரர்களும் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்தே இந்திய அணிக்கு இந்த வரலாற்று வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால், இந்திய வீரர்களின் திறமையை ஏற்றுக் கொள்ள முடியாத பாகிஸ்தான் வீரர்கள் புலம்பி வருகின்றனர்.
