அகமதாபாத்: டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 256 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் சாண்ட்னர், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இது தான் செய்தது தவறு என்று நினைக்கும் அளவுக்கு இந்திய அணி பேட்டிங்கில் மிரட்டி விட்டு சென்று விட்டார்கள்.

இந்த தொடர் முழுவதுமே தடுமாறி வந்த அபிஷேக் ஷர்மா இறுதிப் போட்டியில் பட்டையை கிளப்பினார். தொடக்க ஜோடி இந்த தொடர் முழுவதும் ஒருமுறை கூட 50 ரன்கள் கடக்கவில்லை. ஆனால் இறுதிப் போட்டியில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருவரும் சிக்சர் பவுண்டரி என்று அடித்து நொறுக்கினர். முதல் ஓவரில் வெறும் ஏழு ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு இருவரும் சேர்ந்து தீபாவளி கொண்டாடினார்கள்.

பவுண்டரி, சிக்சர் என அடித்து நொறுக்கிய அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் அரை சதம் கடக்க 52 ரனகளில் பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் முதல் விக்கெட்டுக்கு இந்திய அணி 7 புள்ளி 1 ஓவரில் 98 ரன்கள் குவித்தது. மறுபுறம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதில் நான்கு பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் அடங்கும். இதேபோன்று இசான் கிசனும் களத்திற்கு வந்து அதிரடி காட்டினார்.
நான்கு பவுண்டரி, நான்கு சிக்சர் என பட்டையை கிளப்பி அவர் 23 பந்துகளில் அரை சதம் கடந்தார். முதல் மூன்று வீரர்களும் அரை சதம் கடக்க இந்திய அணி 7.2 வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. அதன் பின் 11.3 வது ஓவரில் 150 ரன்களும், 15 வது ஓவர் முடிவில் 200 ரன்களையும் கடந்து அசத்தியது. சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் 46 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். இதில் எட்டு இமாலய சிக்சர்களும், ஐந்து பவுண்டரிகளும் அடங்கும். இதேபோன்று இசான் கிஷன் 25 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க அடுத்த பந்திலேயே கேப்டன் சூரிய குமார் யாதவும் டக் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 16வது ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து சற்று பின்னடைவை சந்தித்தது. ஹர்திக் பாண்டியா தடுமாறிய நிலையில் 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் நியூசிலாந்து வீரர்கள் மெதுவான பந்தை வீசி பவுண்டரிகளை விடாமல் பார்த்து கொண்டது. ஒரு கட்டத்தில் 16 பந்துகளில் பவுண்டரிகள் வரவில்லை. இறுதி ஓவரில் சிவம் துபே 2 சிக்சர், 3 பவுண்டரிகள் விளாசி 24 ரன்கள் அடித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் டி20 உலககோப்பை இறுதி போட்டியில் 250 ரன்கள் மேல் குவித்த முதல் அணி என்ற சாதனையை படைத்தது. டி20 உலககோப்பை வரலாற்றில் அடிக்கப்பட்டுள்ள 3வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.