துபாய்: நியூசிலாந்து அணியின் இளம் தொடக்க வீரர் வில் யங் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திணறுவது வெளிப்படையாக தெரிந்தது. அப்போது தமிழக வீரர் வருண் சக்கர்வர்த்தி லெந்தை மாற்றி வீசிய வலையில், அவராகவே வந்து சிக்கிக் கொண்டார். இதனால் இந்திய அணி மரண மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். துபாய் பிட்ச் தேய்மானம் அடையும் போது, பேட்டிங் செய்வதற்கு எளிதாக இருக்காது. இதனால் நியூசிலாந்து அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனால் 250 ரன்களுக்குள் நியூசிலாந்து அணியை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்துடன் இந்திய அணி களமிறங்கியது. வழக்கம் போல் முகமது ஷமி முதல் ஓவரை வீச, 2வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். முதல் 3 ஓவர்களை வில் யங் - ரச்சின் ரவீந்திரா கூட்டணி நிதானமாக கையாண்டது. ஹர்திக் பாண்டியா வீசிய 4வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா 6,4,4 என்று விளாசி அதிரடிக்கு திரும்பினார்.
தொடர்ந்து முகமது ஷமி பவுலிங்கிலும் 2 பவுண்டரிகள் அடிக்கப்பட, கேப்டன் ரோஹித் சர்மா உடனடியாக 6வது ஓவரை வீச வருண் சக்கரவர்த்தியை அழைத்தார். அப்போதே இந்திய அணிக்கு கட்டாயமாக விக்கெட் தேவை என்ற நிலை உருவானது. நியூசிலாந்து அணி ஸ்கோரை 7 ஓவர்களில் 51 ரன்களாக உயர்த்தியது.
இதனைத் தொடர்ந்து 2வது ஓவரை வீச வருண் சக்கரவர்த்தி வந்தார். முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா டிஆர்எஸ் மூலம் தப்பிக்க, 2வது பந்தில் ரச்சின் கொடுத்த கேட்சை ஸ்ரேயாஸ் ஐயர் தவறவிட்டார். இதனால் இந்த ஓவரில் நிச்சயம் விக்கெட் வரும் என்று ரசிகர்கள் கூர்ந்து கவனித்தனர். அப்போது சிங்கிள் மாற்றிவிட்டு வில் யங் ஸ்ட்ரைக்கில் இருந்தார்.
வருண் சக்கரவர்த்தி வீசிய 4வது பந்தில் வில் யங் கண்ணை மூடிக் கொண்டு ஸ்வீப் அடிக்க முயற்சித்தார். ஆனால் அது ஷார்ட் லெந்தில் பிட்சாகி பேட்ஸ்மேனின் உடலை அடித்தது. இதனையடுத்து ரோஹித் சர்மா சிக்னல் கொடுக்க, உடனடியாக வருண் சக்கரவர்த்தி லெந்தை கொஞ்சம் ஃபுல்லராக மாற்றி கூடுதல் வேகத்தில் வீசினார்.
அதனை கணிக்க முடியாமல் வில் யங் எல்பிடபிள்யூ முறையில் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதற்கு முன்பாக நடந்த லீக் போட்டியின் போதும் வருண் சக்கரவர்த்தி பவுலிங்கில் வில் யங் ஆட்டமிழந்து வெளியேறி இருந்தார். சரியான நேரத்தில் வருண் சக்கரவர்த்தி விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியை ஆட்டத்திற்கு கொண்டு வந்தது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.