துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி வீரர் வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்துவீசி மீண்டும் ஜொலித்திருக்கிறார். நியூசிலாந்து அணி வீரர்கள் ஆரம்ப கட்டத்தில் அதிரடியாக விளையாடி வந்த நிலையில் வருண் சக்கரவர்த்தி கையில் பந்து சென்றவுடன் ஆட்டம் தலைகீழ் மாறியது.
வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொண்டு நியூசிலாந்து ரன் குவிக்கும் வேகத்தை குறைத்தனர். மேலும் வருண் சக்கரவர்த்தி வில் யங் மற்றும் கிளான் பிலிப்ஸ் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

10 ஓவர்கள் வீசிய வருண் சக்கரவர்த்தி வெறும் 45 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். மேலும் போட்டி முடிவதற்குள் வருண் சக்கரவர்த்தி மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார். நியூசிலாந்து பேட்டிங் முடிந்த பிறகு பேசிய வருண் சக்கரவர்த்தி, கடந்த போட்டிக்கு வழங்கப்பட்ட ஆடுகளத்தை விட இது கொஞ்சம் நல்ல ஆடுகளமாக இருக்கிறது.
பந்து பெரிய அளவில் திரும்ப வில்லை. ஆனால் கொஞ்சம் நின்று வருகிறது.இதனால் பேட்டர்ஸ் தவறு செய்யும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. நான் இறுதி கட்டத்தில் இன்று பந்து வீசினேன். மேலும் பவர் பிளேவிலும் பந்து வீசினேன். இது எனக்கு நல்ல சவாலாக இருந்தது. இது எனக்கு புதிய வாய்ப்புகளை கொடுத்தது.நான் பந்து வீசும் போது குல்தீப்பிடம் பேசிக்கொண்டு அவரிடம் ஆலோசனைகளை கேட்டு பெற்றேன்.
நான் இந்திய அணிக்கு மிகவும் புதிய வீரர் என்பதால் மற்ற வீரர்களுடன் நல்ல நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றேன். எனக்கு காலில் வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் என்னால் நடக்க முடியவில்லை.தற்போது வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டு இருக்கின்றேன். இந்த இலக்கு என்பது எங்களால் அடிக்கக்கூடிய இலக்கு தான். எனினும் எங்கள் அணி வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே எட்ட முடியும் என்று வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.