துபாய்: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, இந்திய அணியை குற்றம் சுமத்தி வருபவர்களை கிண்டல் செய்யும் வகையில் டீ குடிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிலடி கொடுத்து இருக்கிறார். இந்திய அணி ஒரே இடத்தில் அனைத்து போட்டிகளையும் விளையாடியதை விமர்சனம் செய்து வந்தவர்களை கிண்டல் செய்துள்ளார்.
ஒரே ஒரு பதிவை வெளியிட்டு அவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்து இருக்கிறார் வருண் சக்ரவர்த்தி. அவர் வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்றில் டீ குடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அப்போது அவரது மற்றொரு கையில் இந்திய அணி வென்ற 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பையும் இருக்கிறது. அந்தப் பதிவின் கீழ் அவர், "இந்த கோப்பையை சுவைப்பதற்கு நீண்ட தூரம் பயணம் செய்து இருக்கிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.

வருண் சொல்ல வரும் கோப்பை டீ கோப்பை அல்ல, மாறாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை தான் குறிப்பிடுகிறார். அந்தக் கோப்பையை வெல்வதற்கு அவர் தனிப்பட்ட முறையில் கிரிக்கெட்டில் பல போராட்டங்களை சந்தித்து, கிரிக்கெட் வாழ்வில் நீண்ட தூரம் பயணம் செய்திருக்கிறார் என்று ஒரு அர்த்தமும், இந்தியாவில் இருந்து துபாய் வரை பயணம் செய்து, அதாவது வெளிநாட்டிற்கு சென்று விளையாடி கோப்பையை வென்று இருக்கிறார் என்ற மற்றொரு அர்த்தமும் வருகிறது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி மட்டும் துபாய் என்ற ஒரே மைதானத்தில் விளையாடி வெற்றி பெற்றது, இந்திய அணி வீரர்கள் மற்ற அணிகளைப் போல பல நகரங்களுக்கும் பயணம் செய்யவில்லை, ஒரே இடத்தில் விளையாடினார்கள் என கூறி இருந்த நிலையில், அவர்களுக்கு பதிலடியாக அதே சமயம் நகைச்சுவையாக இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறார் வருண்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி துபாயில் அனைத்து போட்டிகளிலும் விளையாடி உள்ளது. மற்ற அணிகள் பாகிஸ்தானுக்கும் துபாய்க்கும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. போட்டி அட்டவணையில் இதனால் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது.
தென்னாப்பிரிக்கா அணி 3700 கிலோ மீட்டர்களும், ஆஸ்திரேலியா அணி 7150 கிலோமீட்டர்களும் பயணம் செய்ததாக பாகிஸ்தான் வீரர் ஜுனைத் கான் விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் தான் வருண் சக்ரவர்த்தி சாம்பியன்ஸ் கோப்பையை சுவைப்பதற்கு நீண்ட தூரம் பயணம் செய்ததாக பதிவை வெளியிட்டு இருக்கிறார்.