துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றதை அடுத்து, வெற்றி கொண்டாட்டத்தில் அனைத்து வீரர்களும் ஈடுபட்டு வந்தனர். அப்போது கேப்டன் ரோஹித் சர்மா கோப்பையை வாங்கி வந்து வீரர்களிடம் அளித்தார்.
வெள்ளை நிற ஜாக்கெட்டை அணிந்து இருந்த இந்திய வீரர்கள் கோப்பையை பெற்று மகிழ்ச்சியில் திளைத்தனர். அப்போது விராட் கோலி ஒரு சாம்பெயின் பாட்டிலை எடுத்து ரிஷப் பண்ட் பார்க்காத போது அவர் மீது ஊற்றினார். துள்ளிக் குதித்து அதை செய்து கொண்டாடினார் கோலி. இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

ரிஷப் பண்ட் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் இந்திய அணி கோப்பையை வென்றாலும், அவருக்கு உள்ளூர ஒரு வருத்தம் இருந்தது. இந்த நிலையில், விராட் கோலி இந்த சம்பவத்தை செய்தார். விராட் கோலி குழந்தைத்தனமாக நடந்து கொண்டது பலரையும் ரசிக்க வைத்துள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி 5 போட்டிகளில் விளையாடியது. குரூப் சுற்றில் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தியிருந்தது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இந்திய அணி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இறுதிப் போட்டியில் மீண்டும் நியூசிலாந்தை சந்தித்தது. நியூசிலாந்து அணி 251 ரன்கள் எடுத்த நிலையில், அந்த இலக்கை இந்திய அணி 49 ஓவர்களில் எட்டி கோப்பையையும் வென்றது.
இந்த போட்டிகள் எதிலும் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல்.ராகுல் தான் செயல்பட்டார். அவரது செயல்பாடும் திருப்திகரமாக இருந்ததால், அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தனக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்டது ரிஷப் பண்ட்டுக்கு வருத்தத்தை அளித்ததாக செய்திகளும் வெளியாகி இருந்தன. இந்த நிலையில்தான், தொடர் முடிந்தவுடன் விராட் கோலி அவர் மீது சாம்பெயினை ஊற்றி அவரை குஷிப்படுத்தி இருக்கிறார்.