பெங்களூர்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த முதல் போட்டிக்கு மழையால் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது. அது குறித்த வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. ஐந்து நாட்களும் கடும் மழை பெய்யக் கூடும் என்பதால் போட்டி ரத்து ஆகவும் வாய்ப்பு உள்ளது. மழையால் எந்த அளவுக்கு இந்த போட்டி பாதிப்புக்கு உள்ளாகும்? என்பதை பார்க்கலாம்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. இந்த தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வரும் அக்டோபர் 16 அன்று துவங்க உள்ளது. இந்த போட்டியின் ஐந்து நாட்களின் போது கடும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக "வெதர்" (Weather-dot-com) இணையதள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த போட்டியின் முதல் நாள் அன்று 100 சதவீதம் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், போட்டி நேரத்தில் 90 முதல் 100 சதவீதம் வரை கடும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. முதல் நாள் ஆட்டத்துக்கு முந்தைய நாள் இரவிலும், அந்த நாளின் விடியற்காலையிலும் மழை பெய்யும் என்பதால் முதல் நாள் ஆட்டம் நடைபெறுவது சந்தேகமாக மாறி உள்ளது.
அடுத்து முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் அன்றும் போட்டி நேரத்தில் 60 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை மழை பெய்யும் எனவும், குறிப்பாக மதிய நேரத்தில் கடும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவே, இரண்டாவது நாள் ஆட்டம் மழையால் நடைபெறாமல் போகக் கூடும்.
மூன்றாம் நாள் அன்று மேலும் மோசமாக 50 முதல் 60 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனவே, மூன்றாவது நாள் ஆட்டமும் வெகுவாக பாதிக்கப்படலாம். நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் அன்று 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
எனவே, இந்த போட்டியின் ஐந்து நாட்களும் மழையால் தடைபட வாய்ப்பு உள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் அன்று மழை குறைந்தால் போட்டி நடக்க வாய்ப்பு உள்ளது. ஒருவேளை மழையின் தீவிரம் அதிகரித்தால் போட்டி ஐந்து நாட்களிலும் ரத்து ஆக வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் மூன்று நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட போதும் கடைசி இரண்டு நாட்களில் அதிரடி ஆட்டம் ஆடி வெற்றி பெற்று இருந்தது.
அதே போல நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியிலும் மழையால் முதல் மூன்று நாட்கள் ஆட்டம் பாதித்தாலும், கடைசி இரண்டு நாட்களில் மட்டும் அதிரடி ஆட்டம் ஆடி வெற்றி பெறலாம் என இந்தியா நினைக்க முடியாது. நியூசிலாந்து அணி அனுபவ வீரர்களை கொண்ட அணியாக இருப்பதால் இந்தியா மழைக்கு நடுவே இந்த போட்டியில் வெற்றி பெற சரியாக திட்டமிட வேண்டும். இந்த போட்டி டிரா ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.