பெங்களூர்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடி வரும் முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தின் போது மழை கொட்டியது. ஏற்கனவே, இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டம் முழுமையாக நடைபெற்று இருந்தது.
இந்த நிலையில் நான்காவது நாள் அன்று மழை பெய்யாது என்ற எதிர்பார்ப்பே இருந்தது. ஆனால், வானிலை அறிக்கையின் கூற்றை உடைத்து எறிந்து 11 மணி அளவில் மழை பெய்தது. அதனால், போட்டி சில மணி நேரம் பாதித்தது. இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 46 ரன்கள் மட்டுமே எடுத்து இக்கட்டான நிலையில் இருக்கிறது. இந்த நிலையில், இந்தப் போட்டி டிராவில் முடிவடையுமா? என்பதை பற்றி பார்க்கலாம்.

இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது. அடுத்து நியூசிலாந்து அணி இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்து முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது.
இரண்டாவது இன்னிங்ஸில் மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்து இருந்தது. இன்னும் 125 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. நான்காம் நாள் அன்று சர்ஃபராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் அதிரடியாக ரன் சேர்த்தனர். சர்ஃபராஸ் கான் சதம் கடந்து அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 600 ரன்களுக்கு மேல் எடுத்தால் மட்டுமே அது சாத்தியம். அதற்காக இந்தியா அணி ஆடி வந்தது.
இந்த நிலையில் நான்காம் நாள் அன்று 11 மணி அளவில் மழை பெய்தது. அதனால், இந்த போட்டி டிராவில் முடிவடைய சிறிய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. தற்போது மழை சிறிது நேரம் மட்டுமே பெய்யும் என கூறப்படுகிறது.
ஓவர்கள் குறைவதால் இந்திய அணி நான்காம் நாள் முழுவதும் கூட பேட்டிங் செய்யக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். ஐந்தாவது நாளிலும் இந்தியா பேட்டிங்கை தொடர்ந்து 150 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெற்றால் அதன் பின் இந்தப் போட்டி டிராவில் முடிவடைய வாய்ப்பு உள்ளது.