பெங்களூர்: கிரிக்கெட் உலகில் கடந்த நான்கு நாட்களில் யாரும் எதிர்பாராத ஐந்து சம்பவங்கள் நடந்தன. மூன்று கிரிக்கெட் தொடர்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை, பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஆகிய இந்த மூன்று தொடர்களிலும் கடந்த நான்கு நாட்களில் எந்த அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டதோ அதற்கு நேர் மாறான விஷயங்கள் நடந்து இருக்கின்றன.
2024 மகளிர் டி20 உலக கோப்பையில் அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரண்டு அரை இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. முதல் அரை இறுதிப் போட்டியில் கடந்த மூன்று டி20 உலகக் கோப்பை வென்று இருந்த, 2009க்கு பின் டி20 உலகக்கோப்பை தொடரில் அரை இறுதிப் போட்டியில் தோல்வியை சந்திக்காத ஆஸ்திரேலியா அணியை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது.

டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மகளிர் அணி கடைசியாக ஆடிய 15 போட்டிகளை தொடர்ந்து வென்று இருந்தது. அதனால், அந்த அணியே அரை இறுதியில் வெற்றி பெறும் என பலரும் எண்ணினர். ஆனால், தென்னாப்பிரிக்கா அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.
அடுத்து அக்டோபர் 18 அன்று நடந்த இரண்டாவது அரை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை நியூசிலாந்து மகளிர் அணி வீழ்த்தியது. இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன் நியூசிலாந்து அணி தான் ஆடிய பத்து போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து இருந்தது. அப்படி மோசமான ஃபார்மில் இருந்த நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதன் மூலம் மகளிர் டி20 உலக கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்கா அல்லது நியூசிலாந்து அணிகள் முதல் முறையாக உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதற்கு முன் மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை.
இந்த இரண்டு சம்பவங்களை அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் தங்கள் அணியின் முன்னணி வீரர்கள் பாபர் அசாம் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி ஆகியோரை நீக்கி இருந்தது பாகிஸ்தான் நிர்வாகம்.
மேலும் 1300 நாட்களுக்கும் மேலாக தங்கள் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற முடியாத அவல நிலையில் இருந்தது பாகிஸ்தான் அணி. ஆனால், முன்னணி வீரர்களை வெளியேற்றிய பின் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது பாகிஸ்தான்.
நான்காவது மற்றும் ஐந்தாவது எதிர்பாராத சம்பவம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் நடந்தது. இந்திய மண்ணில் இந்திய அணி 50 ரன்கள் கூட எட்ட முடியாமல் ஆல் அவுட் ஆகும் என யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். மேலும், சில வாரங்கள் முன் இலங்கை அணியிடம் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தும் எனவும் யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்த இரண்டும் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் நடந்தன. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி அதை பயன்படுத்தி முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அக்டோபர் 17 முதல் 20 வரை நான்கு நாட்களில் கிரிக்கெட் உலகில் பெரும்பாலான ரசிகர்களின் கணிப்பை பொய் ஆக்கி, இந்த ஐந்து சம்பவங்களும் நடந்தேறி உள்ளன.