பெங்களூர்: பெங்களூரில் கடுமையான மழை பெய்து வருவதால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் முதல் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட முடியாமல் ஹோட்டல் அறையிலேயே தங்கி உள்ளனர். நியூசிலாந்து வீரர்களும் ஹோட்டலை விட்டு வெளியே வரவில்லை. இரண்டு அணியின் வீரர்களும் பயிற்சி செய்ய முடியாமல் முடங்கி உள்ளனர்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. இந்த தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி அக்டோபர் 16 முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரு அணி வீரர்களும் பெங்களூரு மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களாக பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

அக்டோபர் 14 அன்று பெங்களூரில் பலத்த மழை பெய்ததால் இரு அணி வீரர்களும் மைதானத்தில் பயிற்சி செய்ய முடியாமல் உள் அரங்கில் மட்டும் சிறிது நேரம் பயிற்சி செய்து பின் ஹோட்டலுக்கு திரும்பினர். இந்த நிலையில் இன்று (அக்டோபர் 15) பெங்களூரில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சின்னசாமி மைதானத்தை சுற்றி இருக்கும் பகுதிகளில் மிகக் கடுமையாக மழை பெய்து வருகிறது.
அதனால் இரு அணி வீரர்களும் மைதானத்திற்கு பயிற்சி செய்ய வரவில்லை. இரு அணி வீரர்களும் ஹோட்டல் அறையிலேயே முடங்கி உள்ளனர். இந்த போட்டி நடைபெற உள்ள ஐந்து நாட்களிலும் மழை பெய்யும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக முதல் இரண்டு நாட்களில் ஆட்டம் நடைபெறுவது சந்தேகமாகவே உள்ளது.
இந்தப் போட்டியின் கடைசி மூன்று நாட்களிலும் கூட அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த போட்டி முழுமையாக ரத்து செய்யப்படுமா? அல்லது சில ஓவர்களாவது பந்து வீசப்படுமா? என்ற கேள்வி உள்ளது. நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி முதல் இடத்தை உறுதி செய்யும். ஆனால், முதல் போட்டிக்கு மழையால் பாதிப்பு ஏற்படும் என்பதால் அது நடக்காமல் போக வாய்ப்பு அதிகம்.