அகமதாபாத்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ள இந்திய அணிக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, எப்போதுமே இந்திய அணியை விமர்சிக்கும் சில பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூட, தற்போது இந்திய அணியின் கட்டமைப்பு மற்றும் வெற்றிக்கான மனநிலையை வெளிப்படையாகப் பாராட்டி வருகின்றனர். அதே சமயம், முகமது அமீர், சோயப் அக்தர் போன்றோர் இந்த வெற்றியை பொறுக்க முடியாமல் புலம்பி இருக்கின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைத் தேர்வாளர் முகமது வாசிம் பேசுகையில், பாகிஸ்தான் அணி இந்தியாவை விடப் பின்தங்கி இருப்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். "நாம் இந்தியாவிடம் தோற்கும்போதோ அல்லது பெரிய தொடர்களில் அவர்கள் சிறப்பாகச் செயல்படும்போதோ, அதில் குறைகளைக் கண்டுபிடிக்கவும், சதித்திட்டங்கள் நடந்துள்ளது என்று கூறவும் முற்படுகிறோம். முதலில் அதை நாம் நிறுத்த வேண்டும். இந்திய அணி ஒரு தலைசிறந்த அணி என்பதை ஏற்றுக்கொண்டு, நமது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சிக்கந்தர் பக்த் கூறுகையில், "பாகிஸ்தான் அணியில் உள்ள தவறான தேர்வுகள் மற்றும் பாரபட்சமான அணுகுமுறைகளைச் சரிசெய்யாவிட்டால் பெரிய தொடர்களில் நாம் தொடர்ந்து திணற வேண்டி வரும். தோல்விகளுக்குச் சாக்குப்போக்கு சொல்வதை நிறுத்திவிட்டுச் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்" என்று விமர்சித்துள்ளார்.
இந்திய அணியின் தொடர் வெற்றிகள் குறித்துப் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியாண்டட் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். "அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் 250 ரன்களுக்கு மேல் குவிக்கும் எந்தவொரு அணியும் சாம்பியன் ஆவதற்கு முழு தகுதி பெற்ற அணியாகும். இந்திய அணி தற்போது தங்களது முறையான கிரிக்கெட் கட்டமைப்பின் பலனை அறுவடை செய்து வருகிறது. அவர்கள் உருவாக்கும் திறமையான வீரர்களே இதற்குச் சான்று. அவர்களிடம் தரமான பேட்ஸ்மேன்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எந்தப் பஞ்சமும் இல்லை" என்று பாராட்டியுள்ளார்.

முன்னாள் பயிற்சியாளர் மொஹ்சின் கான் பேசுகையில், "இந்திய கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது, அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடக்கூடிய சிறந்த வீரர்களை உருவாக்க உதவுகிறது. மேலும், இந்திய வீரர்களிடம் நிதி சார்ந்த எந்தவொரு பாதுகாப்பற்ற உணர்வும் இல்லை. கிரிக்கெட் வாரியம் அவர்களை மிகச் சிறப்பாகக் கவனித்துக்கொள்கிறது" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் கூறுகையில், இந்திய அணியின் இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றார். "ஒரு அணி தொடர்ந்து பெரிய தொடர்களின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்போது, அந்த வீரர்களுக்கு எப்படி வெற்றி பெற வேண்டும் என்ற பழக்கம் வந்துவிடும். நெருக்கடியான நேரங்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதையும் அவர்கள் கற்றுக்கொள்வார்கள். இந்திய அணியில் இருக்கும் இந்தத் தொடர்ச்சியான வாய்ப்புகளும் நிலைத்தன்மையும்தான் அவர்களின் வெற்றிக்குக் காரணம். ஆனால் பாகிஸ்தானில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படுவதால் பல சிக்கல்கள் எழுகின்றன" என்று அவர் வேதனை தெரிவித்தார்.

விளையாட்டு விமர்சகர் நௌமன் நியாஸ் இது குறித்துப் பேசுகையில், "இந்திய அணியின் வெற்றிக்கு, இளம் வீரர்களும் மூத்த வீரர்களும் இணைந்து செயல்படுவதே முக்கியக் காரணம். இறுதிப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் பட்டேல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை மிகச் சரியாகச் செய்து முடித்தனர்" என்று புகழ்ந்துள்ளார்.