மும்பை : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை வியாழக்கிழமை புனேவில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
காயத்திலிருந்து கில் திரும்பி இருப்பதால் அவருக்கு பதிலாக களம் இறங்கி 150 ரன்கள் விளாசிய சர்பாரஸ் கான் அணியின் நீடிப்பாரா? இல்லை கே எல் ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த சூழலில் சர்பராஸ்கானுக்கு தான் வாய்ப்பு தர வேண்டும் என்றும் ராகுலை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று பல கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும் இதுகுறித்து பேசி இருக்கும் கம்பீர் சமூக வலைத்தளத்தில் கூறப்படும் கருத்துக்களை வைத்து இந்திய அணியின் பிளேயிங் லெவனை தீர்மானிக்க முடியாது என்று பேசி இருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சமூக வலைத்தள கருத்துக்களையும் விமர்சகர்களின் விமர்சனங்களையும் அடிப்படையாக வைத்து பிளேயிங் லெவனை தீர்மானிக்க முடியாது.
அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது? கேப்டன், பயிற்சியாளர் என நினைக்கிறார் என்பது தான் மிகவும் முக்கியம். இங்கு அனைவருமே எப்படி விளையாடுகிறார்கள் என்று கவனிக்கப்படுகிறார்கள். சர்வதேச கிரிக்கெட் விளையாடும் அனைத்து வீரர்களின் ஆட்டத்திறனும் ரசிகர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. என்னை பொறுத்தவரை கே எல் ராகுல் நன்றாக தான் பேட்டிங் செய்து வருகிறார்.
வங்கதேசத்துக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் கூட கேஎல் ராகுல் பொறுப்பான ஆட்டத்தை கடினமான ஆடுகளத்தில் வெளிப்படுத்தினார். அணியின் திட்டத்திற்கு தகுந்தார் போல் தான் கே எல் ராகுல் விளையாடி வருகிறார். தாம் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று கே எல் ராகுலுக்கு நன்றாக தெரியும். அப்படி ஸ்கோர் எடுக்கக்கூடிய திறன் கே எல் ராகுலுடன் இருக்கிறது.
இதனால் தான் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு தொடர்ந்து ஆதரவை அளித்து வருகிறது. நியூசிலாந்து அணியில் நான்கு அல்லது ஐந்து இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இதனால் தான் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்து இருக்கிறோம். எனினும் அவர் பிளேயிங் லெவனில் இடம் பெறுவாரா என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை.
நியூசிலாந்து தொடர் முடிவடைந்த உடன் ஆஸ்திரேலியா தொடருக்கு 10 முதல் 12 நாட்கள் ஓய்வு இருக்கிறது. எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள் முழு உடல் தகுதியைப் பெற இந்த ஓய்வு போதுமானதாக இருக்கும். எனினும் எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்களின் உடல் நலத்தை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ஏனென்றால் ஆஸ்திரேலியா போன்ற தொடருக்கு அவர்களுடைய பங்களிப்பு முக்கியமானதாகும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.