புனே : நியூசிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களில் ஆல் அவுட் ஆனது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு கம்பீர் காட்டமாக பதில் அளித்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் புனேவில் செய்தியாளரிடம் பேசிய கம்பீர் இந்திய அணி வீரர்களை தற்காத்து பேசினார்.
அப்போது பெங்களூரில் இந்திய அணி 46 ரன்களில் ஆல் அவுட் ஆனது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கம்பீர், கிரிக்கெட் என்றாலே அப்படித்தான் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டு என்று பொதுவாக சொன்னாலும், களத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

கான்பூரில் இந்திய அணி அதிரடியாக விளையாடியதை நீங்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினீர்கள் என்றால் பெங்களூருவில் 46 ரன்களில் ஆல் அவுட் ஆனதையும் நீங்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் 46 ரன்களில் ஆல் அவுட் ஆன பிறகும் மீண்டும் நாங்கள் அதிரடியாக விளையாடி டெஸ்ட் போட்டியை வெல்லும் நிலைக்கு கொண்டு வந்தோம்.
அதுதான் மிகவும் முக்கியம். இது போன்ற ஒரு அதிரடி கிரிக்கெட்டை தான் நாங்கள் விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். நான் ஏற்கனவே சொன்னது போல் எங்களுக்கு முதல் குறிக்கோளே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது தான். ஆட்டத்தை டிரா செய்வது என்பது எங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு. நாங்கள் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய விதத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், இரண்டு அல்லது இரண்டரை நாட்கள் களத்தில் நின்று விளையாட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எங்களுக்கு கிடையாது.
அந்தக் கட்டத்திலும் டெஸ்ட் போட்டியில் எப்படி வெற்றி பெறலாம் என்று தான் நாங்கள் யோசித்தோம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இன்னும் நாங்கள் நூறு ரன்கள் அதிகமாக அடித்து இருந்தால் நிச்சயம் அந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்று இருப்போம். உலகத்தில் வேறு எந்த அணியும் 46 ரன்களில் ஆல் அவுட் ஆன பிறகு இப்படி நேரடியாக விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் ரன் குவித்தது கிடையாது.
பலரும் இரண்டரை நாட்கள் இந்தியா பேட்டிங் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் எப்படிப்பட்ட தரமான கிரிக்கெட்டை விளையாடுகிறோம் என்பதை தான் கவனத்தில் கொள்கின்றோம். இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்வது என்பது உண்மையிலேயே தலைவலியாக இருக்கிறது. எங்கள் அணியில் திறமை வாய்ந்த பல வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் பிளேயிங் லெவனை தேர்வு செய்வது நல்ல சவாலாகவே இருக்கிறது. ஒரு இடத்திற்கு நிறைய வீரர்கள் போட்டி போடுவது என்பது இந்திய கிரிக்கெட் எந்த அளவுக்கு பலமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.