இந்தூர்: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவினாலும், விராட் கோலியின் தனி ஆள் போராட்டம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக, கோலி சதம் அடித்த தருணத்தில் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் எழுந்து நின்ற வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடந்த போட்டியில் 338 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்தியா துரத்தியது. ரோஹித், கில், ராகுல் என முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, இந்திய அணி படுதோல்வியை நோக்கிச் சென்றது. ஆனால், மறுமுனையில் நம்பிக்கையோடு போராடிய விராட் கோலி, தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

91 பந்துகளில் விராட் கோலி தனது 54-வது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்தார். அணி இக்கட்டான நிலையில் இருந்ததால், வழக்கமான தனது ஆக்ரோஷமான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தாமல் மிகவும் அமைதியாகவே பேட்டை உயர்த்தி காட்டினார் கோலி.
ஆனால், ஓய்வறையில் இருந்த தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் சக வீரர்கள் அனைவரும், கோலியின் இந்தத் தனி ஆள் போராட்டத்தைக் கண்டு வியந்து, இருக்கையை விட்டு எழுந்து நின்று கைகளைத் தட்டி அவருக்கு மரியாதை செலுத்தினர். களத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், கோலியின் சிறப்பான ஆட்டத்தை அங்கீகரித்து கம்பீர் பாராட்டியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சதத்தின் மூலம் விராட் கோலி புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இது கோலியின் 54-வது ஒருநாள் சதம் ஆகும். நியூசிலாந்து அணிக்கு எதிராக கோலி அடிக்கும் 7-வது சதம் இது. இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள் அடித்திருந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் (6 சதங்கள்) சாதனையை முறியடித்து கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் நம்பர் 1 இடத்தைப் பிடித்த கோலி, இந்தப் போட்டியில் 108 பந்துகளில் 124 ரன்கள் குவித்தார். அவருக்கு நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் சிறிது நேரம் ஒத்துழைப்பு அளித்தனர். இருப்பினும், மற்ற வீரர்களின் ஆதரவு இல்லாததால் இந்திய அணி 46 ஓவர்களில் 296 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி, 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தியா தொடரை இழந்த சோகத்திலும், கோலியின் சதமும் அதற்கு கம்பீர் கொடுத்த மரியாதையும் கிரிக்கெட் ரசிகர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.