பெங்களூரு: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 16ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக இரு அணி வீரர்களும் பெங்களூருவில் முகாமிட்டு பயிற்சி செய்து வருகின்றனர்.
குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பயிற்சியில் கடுமையாக ஈடுபட்டு வருகிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி கடைசியாக சதம் அடித்து ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் எதிராக விராட் கோலி சதம் அடித்திருந்தார். அதன் பின்பு எட்டு இன்னிங்ஸ் விராட் கோலி விளையாடி இருக்கிறார். இதில் ஒரு முறை தான் கோலி அரை சதம் அடித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் கோலி அரை சதம் அடித்து 10 மாதங்கள் ஆகிறது. அதுமட்டுமில்லாமல் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி 6, 17, 47, 29 ஆகிய ரன்கள் தான் அடித்து இருந்தார்.
விராட் கோலியின் போட்டியாளராக கருதப்படும் ஜோ ரூட் சதம் சதமாக அடித்து வரும் நிலையில் கோலியும், தனது டெஸ்ட் ரெக்கார்டை சரி செய்யும் பணியில் இருக்கிறார். விராட் கோலி தற்போது 29 சதங்களுடன் உள்ளார். இந்த நிலையில் தான் விராட் கோலி ரன் பசியில் இருப்பதாக பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், விராட் கோலி எப்போதும் போலவே கடும் பசியுடன் இருக்கிறார்.
நியூசிலாந்துக்கு எதிராக முதலில் அவர் ரன் குவிப்பார். பின் ஆஸ்திரேலியாவிலும் ரன் அடிப்பார் என்று நான் நம்புகிறேன். ஒரு முறை மட்டும் அவர் பார்முக்கு வந்து விட்டால், அவர் எவ்வளவு சிறப்பாக ஒரே மாதிரி ரன்கள் அடிப்பார் என்று நாம் அனைவருக்குமே தெரியும். சில கிரிக்கெட் வீரர்கள் அதிரடியாக நாங்கள் ரன்கள் சேர்ப்போம் என்று நினைத்தால், அதனை நான் தடுக்க மாட்டேன்.
அதிரடியாக ஆடினால் 100 ரன்களுக்கு ஆட்டம் இழக்க வாய்ப்பு இருக்கிறது. அது குறித்தும் இப்போதே கவலை எனக்கு இல்லை என்று கம்பீர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளின் இந்தியன் வெற்றி பெற்றால்,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பு மேலும் பிரகாசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.