மும்பை : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் புதன்கிழமை பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்ற உத்வேகத்துடன் இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்கிறது.
இந்த போட்டியில் ரன் குவிக்க வேண்டும் என்ற வெறியுடன் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் பயிற்சி செய்து வருகிறார்கள். வங்கதேசத்துக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் குவித்தது.

இதன் மூலம் இந்திய அணி அந்த டெஸ்ட் போட்டியில் மழையால் இரண்டு நாள் பாதிக்கப்பட்டும் வெற்றியை ருசித்தது. இந்த சூழலில் நியூசிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து பேசிய கம்பீர், எங்கள் அணியில் இருக்கும் வீரர்களால் ஒரே நாளில் 400 முதல் 500 ரன்கள் அடிக்க முடியும். அவர்களுடைய இயல்பான ஆட்டம் அதிரடி என்றால் அவர்களை ஏன் நான் தடுத்து நிறுத்த வேண்டும்.
நாங்கள் அதிரடியாக தான் இனி விளையாடுவோம். அதிக ரிஸ்க் இருந்தால் அதிக சன்மானம் கிடைக்கும். இதே போன்று அதிக ரிஸ்க் எடுத்தாலும் அதிகமான தோல்வியும் கிடைக்கும். அதிரடியாக ஆடுகிறேன் என்ற பெயரில் சில சமயம் நாங்கள் 100 ரன்களில் ஆட்டம் இழக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தாலும் பரவாயில்லை. அது குறித்து இப்போது கவலை கொள்ள தேவையில்லை.
எனினும் நாங்கள் எங்களுடைய வீரர்களை ரிஸ்க் எடுத்து விளையாட வைக்க உறுதுணையாக இருப்போம். அப்படி இருந்தால் மட்டுமே போட்டியை நாம் முன்னேற்றிக் கொண்டு செல்ல முடியும். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முடிவுகள் கிடைக்கும். அதே சமயம் எங்கள் அணியில் சில வீரர்கள் இரண்டு நாள் முழுக்க கூட பேட்டிங் செய்வார்கள்.
எனவே எங்களுடைய முதல் குறிக்கோள் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை நாங்கள் போட்டியை டிரா செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருந்தால், அதை நாங்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது வாய்ப்பாக தான் வைத்துக் கொள்வோம். நாங்கள் மற்றவர்களைப் போல் இப்படித்தான் விளையாடுவோம் என்றெல்லாம் சொல்ல மாட்டோம். எங்களுடைய அணி வீரர்கள் களத்திற்கு சென்று அவருடைய இயல்பான ஆட்டத்தை விளையாடினாலே போதும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.