புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது. முதல் போட்டியை போலவே இந்த முறையும் இந்திய அணியும் பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு இருக்கிறது. இதை அடுத்து எந்த அணிக்கும் பயிற்சியாளராக இருந்திராத கவுதம் கம்பீரை தலைமை பயிற்சியாளராக நியமித்ததால் தான் இந்திய அணி மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவி ஏற்ற பின் இந்திய அணி 27 ஆண்டுகளுக்கு பின் இலங்கை மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் போட்டி தொடரை இழந்து இருந்தது. அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்து இருந்தது.

மேலும் 30 ஆண்டுகளுக்குப் பின் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டி தோல்வியை சந்தித்து இருந்தது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருக்கிறது. இதன் மூலம் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 103 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது.
அதனால், இரண்டாவது போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அது மட்டும் நடந்தால் இந்திய மண்ணில் முதன்முறையாக நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி மாபெரும் வரலாற்று சாதனை படைக்கும். இப்படி கவுதம் கம்பீர் வந்த பின் இந்திய அணி வரலாற்று தோல்விகளை சந்தித்து வருவதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
கவுதம் கம்பீர் கேட்டுக் கொண்டதற்காக இந்திய அணிக்கு இரண்டு துணைப் பயிற்சியாளர்கள், ஒரு வெளிநாட்டு பவுலிங் பயிற்சியாளர் மற்றும் ஒரு ஃபீல்டிங் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர் கேட்ட அனைத்தும் அளிக்கப்பட்ட பின்னரும் இந்திய அணி இதற்கு முன் சிறப்பாக ஆடிய சூழ்நிலைகளில் கூட இப்போது மோசமாக ஆடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கவுதம் கம்பீர் இதற்கு முன் எந்த அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட்டதில்லை. அப்படி பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவும் இல்லாத ஒருவரை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமித்தது தான் இத்தனைக்கும் காரணம் என சிலர் சுட்டி காட்டி உள்ளனர். கவுதம் கம்பீர் இதற்கு முன் ஐபிஎல் அணிகளுக்கு ஆலோசகராக மட்டுமே செயல்பட்டு இருக்கிறார்.
அதே பணியைத்தான் தற்போது இந்திய அணியிலும் அவர் செய்கிறார். ஆனால், பயிற்சியாளர் என்பவர் வீரர்களின் தனிப்பட்ட செயல்பாட்டை உன்னிப்பாக கவனிப்பதோடு, போட்டிகளில் என்ன செய்து வெற்றி பெற வேண்டும் என்ற வியூகத்தை வகுக்க வேண்டும்.
கவுதம் கம்பீர் ஆக்ரோஷமாக ஆட வேண்டும் என்ற ஒரே ஒரு வியூகத்தை மட்டும் தான் வகுத்து இந்திய அணியை அதன்படி ஆட வைக்கிறார். அது டி20 போட்டிகளுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு சரியாக இருக்காது.