மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு கவுதம் கம்பீர் செய்த ஒரு செயல் தான் காரணம் என பிசிசிஐ அதிகாரிகள் அவர் மீது கோபத்தில் இருக்கின்றனர். இதற்கு முன் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கான பிட்ச்சை தயார் செய்வதில் தனி கவனம் செலுத்தி வந்தார்.
எப்போதும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்களை தயார் செய்யக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். ஏனெனில், அப்படிப்பட்ட பிட்ச்களை எதிரணிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன என்பதை உணர்ந்ததால் அந்த நடைமுறையை கடைபிடித்து வந்தார்.

வெளிநாட்டு அணிகளை சேர்ந்த ஏதேனும் ஒரு சுழற் பந்துவீச்சாளர் பிட்ச்சில் இருக்கும் விரிசலில் சரியாக பந்து பிட்ச் ஆகும் வகையில் வீசினால் பந்து வெகுவாக திரும்பும். அதன் மூலம் விக்கெட்களை அந்த அணி எளிதாக வீழ்த்தும். இதை உணர்ந்து ராகுல் டிராவிட் இந்திய மண்ணில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிற்கும் சமமான பிட்ச்களில் இந்திய அணி ஆடுவதை உறுதி செய்து இருந்தார்.
கவுதம் கம்பீர் தலைமையில் இந்தியா விளையாடிய முதல் டெஸ்ட் தொடரான வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இதே நடைமுறைதான் கடைபிடிக்கப்பட்டது. அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடந்த பெங்களூருவிலும் அதுபோன்ற பிட்ச் தான் தயாரிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், முதல் போட்டியில் தோல்வி அடைந்த பின் புனே மற்றும் மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டிகளுக்கு முதல் நாளிலிருந்து சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் பிட்ச்களை தயார் செய்ய வேண்டும் என கவுதம் கம்பீர் மற்றும் துணை பயிற்சியாளர்கள் முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
அதில் இந்திய அணி நிர்வாகத்தில் சிலருக்கு ஒப்புதல் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது. அதை மீறி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். அதை பயன்படுத்தி நியூசிலாந்து சுழற் பந்துவீச்சாளர்கள் அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை வீழ்த்தினர். இதை அடுத்து சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்சை தயார் செய்ய சொன்னது ஏன்? என பிசிசிஐ அதிகாரிகள் பயிற்சியாளர்கள் குழுவிடம் விளக்கம் கேட்டு இருக்கின்றனர்.