மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் பேட்ஸ்மேன்கள் இந்தியாவிலேயே சரியாக ரன் குவிக்காமல் திணறுவதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்களை அதிகம் அமைப்பது தான் என ஹர்பஜன் சிங் விமர்சனத்தை முன் வைத்து பேசி இருக்கிறார்.
இந்த மோசமான பிட்ச்களில் பேட்டிங் செய்ய முடியாததால் தான் ரஹானே உட்பட இந்திய பேட்ஸ்மேன்களின் தன்னம்பிக்கை உடைவதாக அவர் கூறி இருக்கிறார். நீண்ட காலமாகவே இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் நாள் மட்டுமே இந்த பிட்ச்கள் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும்.

இந்திய அணி இது போன்ற பிட்ச்களை தயார் செய்து விட்டு, முதலில் பேட்டிங் செய்ய ஆவலாக இருக்கும். ஆனால், டாஸில் தோல்வி அடைந்தால் அது இந்திய அணிக்கு பாதகமாகவும் முடியும். இது பற்றி ஹர்பஜன் சிங் பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் என்ன நடக்கிறது? என்று பாருங்கள். 10 ஆண்டுகளாக நாம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்களில் மட்டுமே விளையாடுகிறோம். அதில் நாம் டாஸ் வென்று முதலில் 300 ரன்கள் சேர்த்து போட்டியை கட்டுப்படுத்தலாம் என நினைக்கிறோம்."
"ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது? இந்த மோசமான பிட்ச்களில் எப்படி பேட்டிங் செய்கிறோம் என்று நமக்கு தெரிவதில்லை. இந்த பிட்ச்களில் நமது பேட்ஸ்மேன்கள் நிறைய நம்பிக்கையை இழந்து விடுகிறார்கள். அதற்கு மிகப்பெரிய உதாரணம் அஜின்கியா ரஹானே. அவர் நல்ல வீரர். ஆனால், இது போன்ற பிட்ச்களால் அவரது கிரிக்கெட் கேரியர் பாதிக்கப்பட்டு இருக்கிறது. நாம் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் அவர்களுக்கு சாதகமான பிட்ச் தயாரிக்கப்படுவதை பற்றி பேசுகிறோம்."
"ஆனால், அது பேட்டிங் செய்யவே முடியாத பிட்ச்கள் அல்ல. அந்த பிட்ச்கள் இயல்பாகவே சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும். ஆனால், இங்கு இந்தியாவில் எந்த பந்து நேராக வரும், எந்த பந்து திரும்பும் என யாருக்கும் தெரியாது. நாம் போட்டி முழுவதும் பந்தை அடித்து ஆடுவதா, இல்லை தடுப்பாட்டம் ஆடுவதா? என்ற சந்தேகத்துடனே இருக்க வேண்டும்."
"விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் நன்றாக ஆடிய போதும் இந்தியாவில் சரியாக ஆடுவதில்லை. இப்போது நமது நாட்டில் மோசமான போட்டிகளில் ஆடுவதன் மூலம் நம்மால் இந்தியாவில் ரன் குவிக்க முடியவில்லை என்ற சந்தேகம் எழும். அதன் பின் இரண்டு வெளிநாட்டு போட்டிகளில் சரியாக ஆட மாட்டீர்கள். அதன் பின் உங்களை அணியில் இருந்து நீக்கிவிடுவார்கள். இது நல்ல விஷயமா?" என ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பி இருக்கிறார்.