ஹர்திக் பண்டியா காயம்
ஹர்திக் பண்டியா கடந்த 2018ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயம் அடைந்தார். அவருக்கு அப்போது முதல் முதுகு வலி உள்ளது. அப்போது முதல் 2019 ஐபிஎல் தொடருக்கு முன்பு வரை அவர் அணியில் மிகச் சில போட்டிகளில் மட்டுமே ஆடினார்.
அறுவை சிகிச்சை
பின் 2019 ஐபிஎல் தொடர் மற்றும் அதைத் தொடர்ந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று தொடர்ந்து ஆடி வந்தார் ஹர்திக் பண்டியா. உலகக்கோப்பை தொடருக்கு பின்னும் அவரது காயம் குணமாகாத நிலையில், அதற்கு அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.
எதிர்பார்ப்பு
பின் லண்டனில் அறுவை சிகிச்சை செய்து, அதில் இருந்து மீண்டு வந்தார். நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ஹர்திக் பண்டியா பங்கேற்பார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவர் இன்னும் முழுமையாக கிரிக்கெட் போட்டிகளில் ஆட தயாராகவில்லை என அவருக்கு பயிற்சி அளித்த உடற்பயிற்சி நிபுணர் அறிக்கை அளித்தார்.
பயிற்சி போட்டி
இந்திய அணிக்கு முன்னதாக இளம் வீரர்கள் கொண்ட அணி நியூசிலாந்து சென்று பயிற்சி போட்டிகளில் திட்டமிட்டு இருந்தது. அதில் பண்டியாவும் இடம் பெறுவார் என கூறப்பட்டது. எனினும், அவர் உடற்தகுதி குறித்த அறிக்கையால், ஹர்திக் பண்டியா நியூசிலாந்து சென்ற இந்தியா ஏ அணியில் இடம் பெற முடியாமல் போனது.
உடற்தகுதி முயற்சி
இதையடுத்து பிசிசிஐ மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி ஹர்திக் பண்டியாவுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அவரை தயார் செய்ய முயன்று வந்தது. அவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் உடற்தகுதி பெறாததால், டி20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் பண்டியா அணியில் சேர்க்கப்படவில்லை.
அணியில் இல்லை
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. இந்த நிலையில் தான் பிசிசிஐ அவர் இன்னும் உடற்தகுதி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவலை கூறி உள்ளது.
நிச்சயம் தேவை
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வெல்ல ஹர்திக் பண்டியா போன்ற வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் நிச்சயம் தேவை என கருதியதால் தான் அவரை தயார் செய்ய பிசிசிஐ அதிக முயற்சி எடுத்தது.
லண்டன் சென்றுள்ளார்
எனினும், அவரால் சர்வதேச போட்டிகளில் முழுவதுமாக பந்துவீசும் அளவுக்கு தகுதி பெற முடியவில்லை. அவருக்கு இன்னும் பயிற்சிகள் தேவை என கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் லண்டன் சென்றுள்ளதாகவும் பிசிசிஐ தன் அறிக்கையில் கூறி உள்ளது.
என்ன அறிவிப்பு?
பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து ஹர்திக் பண்டியா விடுவிக்கப்பட்டு இருக்கிறார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பிசியோதெரபிஸ்ட் ஆஷிஷ் கௌஷிக் உடன் லண்டன் சென்று, அங்கே மருத்துவர் ஜேம்ஸ் அல்லிபோன்-ஐ சந்தித்து ஆலோசனை பெற உள்ளார் என கூறப்பட்டுள்ளது.
டெஸ்ட் அணி அறிவிப்பு?
நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் டி20 தொடர் விரைவில் முடிய உள்ளத்துள் அடுத்து ஒருநாள் தொடர் நடைபெறும். அதன் பின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. பண்டியா நிலை தெளிவாகி உள்ள நிலையில், தள்ளி வைக்கப்பட்ட டெஸ்ட் அணி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.