வதோதரா: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற, கடைசி நேரத்தில் ஹர்ஷித் ராணா ஆடிய அந்த "கேமியோ" ஆட்டம் மிக முக்கிய காரணமாக அமைந்தது. பொதுவாக ஹர்ஷித் ராணா என்றாலே அவரை ஆதரித்து வரும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தான் நினைவுக்கு வருவார். ஆனால், தனது பேட்டிங் திறமைக்கு கம்பீர் காரணமல்ல, வேறு ஒருவர் தான் காரணம் என மனம் திறந்துள்ளார் ராணா.
வதோதரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 301 ரன்களைத் துரத்திய இந்தியாவுக்கு, விராட் கோலி (93) மற்றும் சுப்மன் கில் (56) வலுவான அடித்தளம் அமைத்தனர். ஆனால், மிடில் ஆர்டர் விக்கெட்டுகள் சரிந்த போது ஆட்டம் நியூசிலாந்து பக்கம் திரும்பியது. அப்போது களமிறங்கிய ஹர்ஷித் ராணா, பதற்றமே இல்லாமல் 23 பந்துகளில் 29 ரன்கள் விளாசி ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார். பந்துவீச்சிலும் 2 முக்கிய விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருந்தார்.

ஹர்ஷித் ராணாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கண்டெடுத்து, இந்திய அணி வரை கொண்டு வந்ததில் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், தான் பேட்டிங்கில் ஜொலிக்க தனது தந்தை பிரதீப் ராணா தான் காரணம் என்று ஹர்ஷித் கூறியுள்ளார்.
போட்டி முடிந்த பிறகு பிசிசிஐ டிவி-க்கு அளித்த பேட்டியில் அவர் பேசுகையில், "எனது அப்பா எப்போதுமே ஒன்றைச் சொல்வார். 'நீ பவுலிங் மட்டும் செய்தால் போதாது, பேட்டிங்கையும் சீரியஸாக எடுத்துக் கொள். வெறும் பவுலராக இருப்பதை விட, ஆல்-ரவுண்டராக இருந்தால் தான் இந்திய அணியில் சீக்கிரமாக இடம் கிடைக்கும்' என்று கூறுவார். அவர் ஆசைப்பட்டபடியே பேட்டிங்கில் கவனம் செலுத்தினேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும் பேசிய அவர், "எட்டாவது இடத்தில் களமிறங்கி, அணிக்குத் தேவையான ரன்களைச் சேர்க்க வேண்டும் என்பதே என் குறிக்கோள். பின்வரிசை வீரர்களுடன் பேட்டிங் செய்யும்போது, இதுபோன்று ரன் சேர்ப்பது அணிக்கு மிகவும் உதவும். அதற்காகத் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்" என்றும் தெரிவித்தார்.
கம்பீர் பந்துவீச்சுக்கு வாய்ப்பளித்தாலும், "நீ பேட் பண்ண வேண்டும்" என்று சிறுவயதிலேயே விதை போட்டது அவரது அப்பா தான் என்பது இப்போது ரசிகர்களுக்குத் தெரிய வந்துள்ளது. ஹர்ஷித் ராணா போன்ற ஒரு ஆல்-ரவுண்டர் கிடைத்துள்ளது இந்திய அணிக்குக் கூடுதல் பலமாக அமைந்துள்ளது.