பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஏன் விக்கெட்களை பறிகொடுத்தார்கள்? என்பது பற்றிய புள்ளி விவரம் ஒன்று வெளியாகி உள்ளது.
பொதுவாக இந்திய ஆடுகளத்தில் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை அதிகம் நிலவாது. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சுழற் பந்துவீச்சுக்கே சூழ்நிலை அதிகம் சாதகமாக இருக்கும். வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற ஆடுகளங்களில் அதிக ஸீம் மற்றும் பவுன்ஸ் இருக்கும். அதுபோன்ற சூழ்நிலை இந்தியாவில் இருக்காது.

அந்த நம்பிக்கையில் தான் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இருந்தது. பிட்ச் தட்டையாக இருந்ததால் முதலில் பேட்டிங் செய்யும் அணி விரைவாக ரன் குவிக்கலாம் என கேப்டன் ரோஹித் சர்மா நினைத்தார். முதல் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டு இருந்ததால் நான்கு நாட்களில் இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தார் ரோஹித்.
டாஸில் தோல்வி அடைந்த பின் நியூசிலாந்து அணியின் கேப்டன் தாங்களும் முதலில் பேட்டிங் செய்ய விரும்பியதாக குறிப்பிட்டு இருந்தார். அப்படி என்றால் இரண்டு அணிகளுமே இது பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் என்ற மனநிலையில்தான் இருந்தனர். முதல் 20 அல்லது 30 ஓவர்கள் மட்டுமே வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். அதை சமாளித்து விடலாம் என்று இரண்டு அணிகளும் எண்ணி இருந்தன.
ஆனால், நியூசிலாந்து ஆடுகளம் போன்ற ஒரு சூழ்நிலை பெங்களூரு மைதான பிட்ச்சில் இருக்கும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் அதிக "ஸீம் மூவ்மெண்ட்" (Seam movement) இருந்தது. அதாவது பந்து பிட்ச்சான பின் எத்தனை டிகிரி நகர்கிறது? என்பதே ஸீம் மூவ்மெண்ட் ஆகும்.
இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக 0.5 டிகிரி அளவுக்கு ஸீம் மூவ்மெண்ட் இருந்துள்ளது. ஆனால், இரண்டாம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து பந்து வீச்சாளர் மாட் ஹென்றி பிட்ச் செய்த பின் ஸீம் மூலம் பந்தை 1.3 டிகிரி அளவுக்கு நகர்த்தினார்.
அதே போல, நியூசிலாந்து அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் டிம் சவுதி ஒரு டிகிரியும், இளம் வேகப் பந்துவீச்சாளர் வில்லியம் ஓ ரூர்க் 0.8 டிகிரியும் பந்தை ஸீம் செய்து நகர்த்தினர். அதனால் தான் இந்திய பேட்ஸ்மன்களுக்கு பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. அது மட்டும் இன்றி கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய ஆடுகளங்களில் இருந்த பவுன்சை விட 20 சதவீதம் அதிக பவுன்ஸ் இருந்தது.
ஒரே நேரத்தில் ஸீம் மற்றும் அதிக பவுன்ஸ் இருந்தது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியது. நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர்கள் அதிக உயரமாக இருந்தது அவர்களுக்கு பந்து பவுன்ஸ் ஆக முக்கிய காரணமாக அமைந்தது. பந்தை அதிகம் ஸீம் மூலம் நகர்த்திய மாட் ஹென்றி 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். பந்தை அதிகம் பவுன்ஸ் செய்த வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.